Saturday 16 November 2013

காத்திருப்பு

காலம் கனிகிறது
நேரம் நெருங்குகிறது
நெருப்பு வைத்தவர்
நெஞ்சேறி மிதிக்கவென
பற்ற வைக்கக் குச்சி கொடுத்தவர்
படம் காட்டி எம்மை
பதற வைக்கிறார்

எமக்காக அவர் ஏதேதோ செய்கிறார்
ஏக்கத்துடன் நாம் பார்த்திருக்கிறோம்

எம் பெண்களை எப்படி வதைத்தார்
துணி களைந்து துடிக்க வைத்தார்
நிர்க்கதியாக்கி நெரித்துக் கொன்றார்

ஆவிதுடிக்க அந்தரிக்க
அத்தனை வதைகளும்
எம்மவருக்கு எத்தர்கள் செய்தார்
அத்தனையும் நாம் பார்த்திருக்கிறோம்
அழுதுவிட்டுக் காத்திருக்கின்றோம்

இன்னும் எத்தனை படங்கள் போடுவார் ???
எதிரியை எப்போ சிக்க வைப்பார் ????
நீதிமன்றின் முன் நிக்க வைப்பார் ????
எத்தனை கேள்விகள் எம்மிடம் உண்டு

ஆயினும்

மற்றவன் எமக்காய் எல்லாம் செய்வதை
மானம் கெட்டுப் பார்த்திருக்கின்றோம்
நாமாய் எழுந்து நமக்காய் செய்ய
நாதியற்றுக் காத்திருக்கின்றோம்

பெருமை பேசியே அழிந்த தமிழா!!!!
பேதைமை நீங்கி எழுந்திடு
மாற்றான் கையால் மானம் காத்திடும்
மடமை கொன்று நீ எழுந்திடு

உன்னைக் காத்திட நீதான் வேண்டும்

மண்ணைக் காத்திட
அம்மண்ணில் பிறந்து
மண்ணில் நடந்து
மகிழ்ந்த நீ தயங்கிடில்
ஆண்டுகள் ஆயிரம் ஆயினும்
அடி நிலம் கூட அடைய
நீ அருகிலன்


 

No comments:

Post a Comment