Wednesday 11 June 2014

அஸ்தமிக்கும் பொழுதில் - கவிதை



அஸ்தமிக்கும் பொழுதில்
எண்ணங்கள் எருக்களாகி
எட்டமுடியா எல்லைவரை
ஏகாந்தம் தொடரும்

கடுகளவு எண்ணங்கள்
காடளவு கருக்கொள்ளும்
கண்ணிமைக்கும் பொழுது கூட
காலாண்டாய் கனமாகும்

ஒரு துளி வெள்ளத்தில்
ஓராயிரம் புளுதிகளாய்
எண்ணக் கோர்வையில்
ஏதேதோ வந்து போகும்

எல்லாம் இருந்தும்
ஏதுமற்ற ஏதிலியாய்
எல்லைகள் அற்று
எண்ணங்கள் நீண்டாடும்

வண்ணங்கள் நிறமிழந்து
வக்கற்று நிற்பதுபோல்
வகையற்ற கனவுகள்
வந்து வந்து நிழலாடும்

வார்த்தைகள் இழந்த மனம்
வாழ்வின்றி தவிப்பதுபோல்
வித்திட்ட நினைவுகள்
வெளிதனில் நிழலாடும்

ஒன்றெண்ணி ஒன்றற்று
ஓர விழி வரம்பில்
ஒவ்வொரு நினைவுகளாய்
ஓரங்கள் நனைத்திடும்

கானங்கள் அற்ற வரிகளின்
கனதியான காட்சிகளாய்
கட்டுப்பாடுகள் அற்று
கண்முன் கலைந்தாடும்

கரைகாண முடியாத கனவுகளின்
கடைசித் துளி மட்டும்
காட்சியில் விரிந்திருக்க
கண்ணயர முடியாது கரைகிறேன்

No comments:

Post a Comment