Wednesday 11 June 2014

விடிவெள்ளி -கவிதை




விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது
வெடி கண்ட நிலம் போல்
சிதறிய மனம் மீண்டும்
விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது

கொடுவானின் இடி மின்னல்
கொடுங் காற்று எல்லாம்
கோரத் தாண்டவம் ஆடி முடித்து
காற்று அலைகளின் சீற்றம் குறைந்து
கோலங்கள் காட்டி நிற்கிறது

வேருடன் மரங்கள் வீழ்ந்தன
எனினும் வாடை அடங்கி
மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில்
மருண்ட மேகங்களின்
மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும்
மின்னல் கீறி மறைகின்றன

ஓசை அடங்கக் காத்திருந்தேன்
என் ஆசை அடக்கி மேகத் தீயுள்
மோதும் உன் முகம் காண
முடிவேதும் இல்லா
மழை வானின் எல்லையில்
மண்ணொடு மண்ணாய்
மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன்

முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து
முடிவற்ற என் பயணம் முடிந்து
மலர் கண்ட வனமாய்
மலர்கின்ற மனம் கொண்டு
மீட்டும் உன் இசை கண்டு
முடிவிலா வானில் முடிவுகள் அற்று
மேவும் இசையாய் மின் மினிப் பூச்சிகள்
மனதசைத்துப் பறக்கின்றன

No comments:

Post a Comment