Saturday 26 July 2014

வேண்டும் - கவிதை




உள்ளத்தில் மேன்மை வேண்டும்
உண்மையைப் பேசிட வேண்டும்
நெஞ்சத்தில் நிமிர்வு வேண்டும்
நேர்மையாய் நடந்திட வேண்டும்

வஞ்சங்கள் அழித்திட வேண்டும்
வாய்மையில் வீரம் வேண்டும்
விளைவுகள் நோக்கிட வேண்டும்
வீரமாய்ப் போரிடவேண்டும்

கொள்கைகள் வகுத்திட வேண்டும்
கொடுமையை மிதித்திட வேண்டும்
கோடுகள் கிழித்திட வேண்டும்
கொண்டதை முடித்திட வேண்டும்

துன்பங்கள் கொன்றிட வேண்டும்
தூணாய் நின்றிட வேண்டும்
துயரங்கள் சுமந்திட வேண்டும்
துச்சமாய் நோக்கிட வேண்டும்

தீயவை தெளிந்திட வேண்டும்
தீண்டாமை ஒழிந்திட வேண்டும்
தேசத்தில் நேசம் வேண்டும்
திடத்துடன் எழவே வேண்டும்

மண்ணிலே பற்று வேண்டும்
மடைமைகள் ஒழிய வேண்டும்
முடிவிலா முயற்சி வேண்டும்
மேன்மையுடன் வாழ வேண்டும்

விண்ணுந்து - கவிதை


 Photo: வானப்பரப்பில் மேகப் பொதிகளின் ஊடே 
இறக்கைகள் விரித்துப் பறக்கிறது 
விண்ணின் பறவை 

ஆயிரம் தூரம் கடந்தும் 
அசையாத நம்பிக்கை கொண்டு 
ஆடி அசைந்து செல்வதாய் எம்முன் காட்டி 
வேகம் கொண்டு செல்கிறது விமானப்பறவை 

எத்தனை பேரைச் சுமந்தும் இறுமாப்புடன்
எழில் கொண்டு பறக்கிறது எல்லைகள் கடந்து 
மேகப்பொதிகளை  ஊடறுத்து மெல்ல மேலேறி 
மாயாயாலம் தான் செய்கிறது மேகப்பறவை

வெண்பஞ்சு மேகங்கள் அள்ளி விளையாட ஆசை காட்ட 
தொடமுடியாத் தூரத்தில் தோகை விரித்தாடி 
திக்கெட்டும் வான்பரப்பு நெஞ்சைக் கொள்ளை கொள்ள
திகட்டாது மனதை மகிழ்வித்துப் பறக்கிறது  

எல்லைகளற்ற வானப்பரப்பு  எதுவுமேயற்று 
நீலங்கள் நிறைந்து நிதர்சனம்று இருக்கின்றது 
பயமும் பயமற்ற நிலையம் மனதை நிறைக்க 
பயணம் தொடர்கிறேன் பல நினைவுகளோடு 

ஆனாலும் வீட்டின் கணவன் பிள்ளைகள் 
காச்சிவச்ச கருவாட்டுக் குழம்பு கண்மணக்க
என்னவானதோ வீடு எனும் ஏக்கமும் கூட 
எப்படியோ எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது 

என்னதான் செய்வது பெண்ணின் நிலை 
எப்போதும் இதுதான் உலகில் மாற்ற முடியாததாய்
காலம் கடந்தென்ன கரைகள் கடந்தென்ன 
குடும்பக் கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும் 
குறுகிய மனம் எப்போதும் உள்ளபடி எம்மோடு
வானப்பரப்பில் மேகப் பொதிகளின் ஊடே
இறக்கைகள் விரித்துப் பறக்கிறது
விண்ணின் பறவை

ஆயிரம் தூரம் கடந்தும்
அசையாத நம்பிக்கை கொண்டு
ஆடி அசைந்து செல்வதாய் எம்முன் காட்டி
வேகம் கொண்டு செல்கிறது விமானப்பறவை

எத்தனை பேரைச் சுமந்தும் இறுமாப்புடன்
எழில் கொண்டு பறக்கிறது எல்லைகள் கடந்து
மேகப்பொதிகளை ஊடறுத்து மெல்ல மேலேறி
மாயாயாலம் தான் செய்கிறது மேகப்பறவை

வெண்பஞ்சு மேகங்கள் அள்ளி விளையாட ஆசை காட்ட
தொடமுடியாத் தூரத்தில் தோகை விரித்தாடி
திக்கெட்டும் வான்பரப்பு நெஞ்சைக் கொள்ளை கொள்ள
திகட்டாது மனதை மகிழ்வித்துப் பறக்கிறது

எல்லைகளற்ற வானப்பரப்பு எதுவுமேயற்று
நீலங்கள் நிறைந்து நிதர்சனம்று இருக்கின்றது
பயமும் பயமற்ற நிலையம் மனதை நிறைக்க
பயணம் தொடர்கிறேன் பல நினைவுகளோடு

ஆனாலும் வீட்டின் கணவன் பிள்ளைகள்
காச்சிவச்ச கருவாட்டுக் குழம்பு கண்மணக்க
என்னவானதோ வீடு எனும் ஏக்கமும் கூட
எப்படியோ எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது

என்னதான் செய்வது பெண்ணின் நிலை
எப்போதும் இதுதான் உலகில் மாற்ற முடியாததாய்
காலம் கடந்தென்ன கரைகள் கடந்தென்ன
குடும்பக் கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும்
குறுகிய மனம் எப்போதும் உள்ளபடி எம்மோடு


எண்ணங்கள் நகர்கின்றன - கவிதை




எண்ணங்கள் நகர்கின்றன
எதிரிகளாய் எப்போதும்
எதையோ எதிர்பார்த்தபடி

எண்ணக் கரு நிறைந்து
அடைகாத்தல் ஏதுமின்றி
அத்தனையும் திசுக்களாகி
எல்லைகளற்று விரிந்துகொண்டே
எங்கும் நிறைகின்றன

இல்லாத வினாக்கள் காணும்
இடைவெளியற்ற விடைகளால்
எப்போதும் மனம் எங்கெங்கோ அலைந்து
எண்ணமுடியாத் தூரங்களை
எப்படியோ கடக்கிறது

மனதின் இசைபிற்கேற்ற
மாற்றமுடியா நம்பிக்கைகளொடு
மகுடியற்ற பாம்பாய்
படம்விரித்தாடிப்
பயம் கொள்ள வைக்கின்றது

எத்தனை நாள் இன்னும்
இருக்கும் வரை என்னும்
எண்ணத் தோன்றல் மீதமிருக்கும்
நம்பிக்கையின் சுவர்களை
நலிவடைய வைக்கின்றது

ஆனாலும் வாழ்வின் வலிந்த இழுப்பில்
வலியற்றிருக்க வேண்டி
வக்கரிக்கும் நினைவுகளை
விழி மூடி வசியம் செய்யப் பார்க்கிறேன்

பைத்தியமா ????? - கதை



எனது கடைக்கு நீண்ட காலமாக வரும் ஒரு லண்டன் காரன் பெயர் யோன். அவரின் தலை முடி கருப்பாக இருக்கும். அவர் கலப்பினமாக இருக்கலாம் என்று எண்ணி நீ எந்த நாட்டவன் என்று கேட்டுவைக்க நான் பிரிட்டிஷ். இங்குதான் பிறந்து வளர்ந்தேன் என்றதுடன் மேற்கொண்டு அவனை நான் அவன் யார் எவர் என்று கேட்பதில்லை.

அவன் தூரத்தில் வரும்போதே ஒரு நாற்றம் என் மூக்கை அடைக்கச் செய்யும். நான் அவன் கடையில் நிற்கும் நேரம் அத்தனையும் எவ்வளவு விரைவில் அவனை அனுப்பிவிட முடியுமோ அத்தனை விரைவாக அணிப்புவேன். குடிவகைகளின் நாற்றமோ அன்றி குளிக்காமல் இருப்பவரின் நாற்றமோ இல்லை. பிணங்களின் வாடைபோல் அது இருக்கும். எனவே அவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் வழியில் தென்படும் சவக்காலைகள் எல்லாம் என் கண்முன்னே வந்து போகும். அவனிடம் என்ன என்று கேட்பதே இல்லை.



கணவர் நிற்கும் நேரங்களில் அவன் வரும் போது நான் பின் பக்கமாக நழுவிவிடுவேன். அவன் சென்றபின் கணவர் கதவைப் பெரிதாகத் திறந்துவிட்டதன் பினரே நான் மீண்டும் வருவேன். ஆனால் அவனது முகம் பார்க்க நட்புடன் இருக்கும். வந்த உடனேயே பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள். படிப்பு எப்படிப் போகிறது, விடுமுறை செல்லவில்லையா என்று அக்கறையாக விசாரிப்பான். அதுமட்டுமன்று ஒவ்வொருநாளும் கடையில் பதினைந்து தொடக்கம் இருபது பவுண்டுகளுக்குக் குறையாது பொருட்களை வாங்குவான்.

என் கணவரின் மூக்கு மாலையில் வரும் குடிகாரக் கஸ்டமர்களிடம் எல்லாம் இசைபாக்கம் அடைந்து இவனது மணம் பெரிதாகத் தெரிவதில்லை என்பார். அவன் பிணங்களுடன் தான் வேலை செய்வதாக ஒருநாள் கணவர் கூறினார். அதன் பின் அவன் தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவன் சென்றபின் கைகளைக் கழுவியபின் தான் நின்தியாக இருக்கும்.

நான் விடுமுறையில் நின்றதனால் கன நாட்கள் அவனைக் காணவில்லை. இன்று மதியம் அவன் கடைக்கு வரும் போதே அவனில் மாற்றம் தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி முகத்தில் மலர்ச்சியின்றி, நான் இன்னொரு கஷ்டமரிடம் நின்றிருந்தபடியால் அவனைப் பார்த்து ஹலோ என்றுவிட்டு என் அலுவலைப் பார்த்தேன். அவன் கடையின் பின் பக்கமாகச் சென்றவன், எதோ பெரிதாகக் கதைப்பது கேட்டது. அவன் என்னிடம் தான் எதோ சொல்கிறான் என எண்ணியபடி உனக்கு ஏதும் உதவி தேவையோ என்றேன்.

நான் புதியவனல்ல எனக்கு உதவி தேவை இல்லை. எனக்கு டெற்றோல் பெரியதில் ஆறு வேண்டும் என்றான். அங்கு இல்லையா முடிந்துவிட்டதா என்று நான் கேட்டேன். நான் இப்ப இரண்டு கொண்டுபோகிறேன் எனக்கு இன்னும் ஆறு வேண்டும் என்றான். எம்மிடம் வேறு இல்லை என எண்ணியபடி நாளை வா வாங்கி வைக்கலாம் என்றேன். ஏன் எனக்கு ஆறு வைக்க முடியாதா என்று அவன் கேட்டபோதுதான் அவன் சொல்வதில் எதோ சிக்கல் இருப்பது புரிந்தது.

அவனின் பொருட்களைக் கொண்டுவந்து மேசையில் அடுக்கியவுடன் நான் ஒவ்வொன்றாக அடிக்கத் தொடங்கினேன். அவனுக்குப் பின்னால் இன்னொரு பெண் குழந்தையுடன் பொருட்களையும் காவியபடி வந்து நிற்க, பொருட்களை வாங்கி வைப்பதற்காக நான் அவள் பக்கம் கையை நீட்டினேன். எனக்கு முதலில் சேவ் பண்ணு என்று என்னை உறுக்குவது போல் கத்தினான். அந்தப் பெண் அதிர்ந்ததில் அவள் கையிலிருந்த பொருளொன்று கீழே விழுந்தது. நான் அவளது பொருட்களை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு இவனது பொருட்களை அடித்து முடித்தேன். பதினெட்டுப் பவுன்கள் சொச்சம் வர அதை நான் அவனுக்குக் கூறினேன்.

அவன் உடனே அந்தப் பெண்ணை முடித்துவிட்டு என்னை அனுப்பு என்றான். உனது பொருட்கள் அடித்து முடித்துவிட்டேன் நீ பணத்தைச் செலுத்து என்றதற்கு, நான் சொல்வது உனக்கு விளங்கவில்லையா ?? அவளை முதலில் அனுப்பு என்று மீண்டும் எனக்குக் கட்டளையிட்டான். அவனின் அசாதாரண நிலை புரிந்து போனதால் நான் மீண்டும் எல்லாவற்றையும் கான்சல் செய்துவிட்டு அவளை முன்னே வருமாறு அழைக்க அவள் முன்னே வந்தால். பின்னால் சென்றவன், உனக்கு ஆங்கிலம் விளங்காமல் எப்பிடிக் கடையை நடத்துகிறாய் என்று கூற, எனக்கு ஆங்கிலம் கதைக்கத் தெரியும் என்று நான் கோபமானேன்.

உடனே அவன் பெரிதாகச் சிரிக்க ஆரம்பிக்க, அவனின் சிரிப்பின் கோரம் தாங்காது அந்தப் பெண்ணின் கையிலிருந்த குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. அந்தப் பெண்ணை ஒருவாறு அனுப்பிவிட்டு அவனை அழைக்க அவனோ மீண்டும் என்னை எதோ திட்டியபடி பெரிதாகச் சிரித்தபடி வந்தான். மீண்டும் அவனைக் கணக்கை முடித்து ரிசீற்ரைக் கொடுக்க எனக்கு சரியான றிசீட் வேண்டும். மீண்டும் அடி என்றான். மற்றும் நேரம் எனில் முடியாது வெளியே போ என்றிருப்பேன். இது ஒன்றும் செய்ய முடியாது இரு பைகளுள் அடக்கிய பொருட்களை வெளியே எடுத்து மீண்டும் அடித்தேன். பணத்தைத் தந்துவிட்டு அவன் வாசல்ப் பக்கம் செல்ல இன்னொருவன் வந்துவிட்டான். நான் வந்தவனைக் கவனிக்க இவனோ இன்னும் வாசல்ப் பக்கம் நின்று நாம் போட்டிருந்த மற்றை(matt) மற்றவளம் திருப்பிப் போட்டுக்கொண்டிருந்தான்.

சரி என்று இவனை அனுப்பிவிட்டுப் பார்த்தால் இன்னும் நின்றுகொண்டிருந்தான். கடையில் என்னையும் அவனையும் தவிர யாரும் இல்லை. கூடவே பயமும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. எதாவது மறந்துவிட்டாயா என்று கேட்க நீ எனக்கு ரிசீற் தரவில்லை. அதுதான் நிக்கிறேன் என்றான். என்னடா இது தொல்லை என்று மனதுள் எண்ணியபடி, உனக்குத் தந்துவிட்டேனே என்றேன். நீ தரவில்லையே என்றபடி ரில்லுக்குக் கிட்ட வர, என்ன தற்காப்பு முயற்சி எடுக்கலாம் என என் மனம் எண்ணத் தொடங்க, கீழே குனிந்து இன்னொரு ரிசீற்ரை எடுத்துக்கொண்டு, ஓ கீழே எறிந்துவிட்டாயா என்றான். நான் எறியவில்லை என்று நாக்கு நுனியாரை வந்த வார்த்தையை அடக்கியபடி சொறி என்றேன். அவனும் சந்தோசமாக எடுத்தபடி சரி ஆங்கிலம் கதைக்கத் தெரியாமல் எப்படிக் கடை நடத்துகிறாய் என்று கேட்டபடியே வெளியேறினான்.

அப்பாடா நின்மதி என எண்ணியபடியும் ஏன் இவனுக்கு இப்படி ஆனது என எண்ணியபடியும் இருக்க இதை யாழில் எழுதவேண்டும் என்று எண்ணம் தோன்றியது. சரி எழுதுவோம் என எழுத ஆரம்பிக்க மீண்டும் கதவைத் திறந்துகொண்டு அவன் உள்ளே வந்தான். நான் பயத்தை விழுங்கியபடி சிரித்துக்கொண்டே என்ன என்றேன். நீ ரிசீட் தரவில்லை என்ற பழைய பல்லவி. நீ எவ்வளவு காசுக்குப் பொருட்கள் வாங்கினாய் என்றதற்கு இருபது பவுண்களுக்கு வாங்கினேன் என்றான். இருபது பவுன்டுகளுக்கு ரிசீட் அடித்துக் கொடுத்தவுடன் நீ மறந்துவிட்டாய் என்று கூறியபடி வெளியே செல்பவனை இரக்கத்தோடு பார்த்தபடி நின்றேன் நான்.

காத்திருப்பு - கவிதை


காலங்களின் காத்திருப்புகளில்
கருணைக் கொலையாய் அன்பும்
வேண்டியோருக்கு இல்லாமலும்
வேண்டாதோர்க்கு இருப்பதுமாய்
மனதின் உணர்வுகளை எல்லாம்
மழுங்கவைக்கின்றன

பகிர்தலற்ற பக்குவமாய்
பாறாங்கல்லாய் மனிதர்கள்
மிகைப்படுத்தப்படும் மனத்தின்
மீட்சியற்ற எண்ணங்களிநூடே
மறுதலித்து மனம் கொள்ளும் நினைவுகள்

நிமிடங்கள் நாட்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகி
அடைகாத்துவைத்த எண்ணக் குவியலில்
ஏமாற்றத்தின் உத்தரிப்பில்
அத்தனையும் அர்த்தமற்றதாகின்றன

இனிவரும் காலங்களின் வகுத்தல்
எதுமற்றதாகி இயலாமை நிறைந்ததாய்
எதிர்மறை எண்ணங்களின் எக்களிப்பில்
எல்லைகள் கடந்தும் எங்கும்
எல்லாமே இல்லாதாகின்றன

இருளற்ற காலங்களில் தெரியும்
தெளிவான காட்சிகள் கூட
தேவைகளின் நிர்ப்பந்தங்களில்
நிகரான நகர்த்தல்களின் காட்சி
இருப்பின் அர்த்தத்தைத் தகர்ப்பதாய்
எப்போதும்போல் ஏகாந்தத்தை
எட்டவே நிறுத்தியபடி

காலைக் கதிரவன் - கவிதை


காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள்
குளித்தென்னை மகிழென்று
கூவி அழைக்கின்றன
இதமான சூடற்ற காலை வெயில்
எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது

இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள்
பசுமையும் அழகு கூட்ட
பார்க்கும் இடமெங்கும்
பரவசம் தருகின்றன

குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை
கூம்பான இதழ் கழற்றிக்
கொள்ளைச் சிரிப்புடனே
நிலம் பார்க்க நிற்கிறது

வாசனைப் பூக்களெல்லாம்
வாடியவை காற்றில் கழித்து
வசதியாய்ப் பார்த்தபடி
வகைக்கொன்றாய் இருக்கின்றன

வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில்
கண்மலர்ந்து மடல்கள் விரித்தே
கதிரவன் கண்பார்க்க
காதலுடன் நிற்கின்றாள்

கடமை என் காட்சிகள் கலைக்க
கவிந்த மனம் கட்டறுத்து வீழ
கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி
காலத்தின் கணக்கில் கரைந்து போகிறேன்

தடம் - கவிதை



ஆண்டுகள் ஆயிரம் ஆனது
எம் ஆசைகள் நூர்ந்து போனது
காத்திருப்புக்கள் கரைந்து
காரணம் அற்றதாய் இருப்புக்கள் ஆனது

சுதந்திர தேசம் சுடுகாடாய் ஆக
சுரணை அற்ற தமிழர் செருக்கழிந்து போக
சுற்றி இருந்தவர் எருக்களாய் ஆக
சோகம் மட்டுமே மிச்சமாய் ஆனது

எத்தனை ஆண்டுகள் கட்டுகள் உடைத்து
எதிரிகளின் தூக்கம் தொலைத்து
எங்கணும் எம் தடம் பதித்து
எத்தர்களை எட்டி உதைத்தோம்

அத்தனையும் அன்று எம்மை விட்டு
எதிரியிடம் மொத்தமாய்ப் போனது
ஆறுதல் சொல்லவும் ஆரும் அற்றதாய் 
அந்திமக் காலத்தின் அவலமாய் ஆனது 

அறிவின் தடங்கள் அழிக்கப்பட்டு 
உயிர்ப்பின் தடங்கள் உருக்கப்பட்டு
இருப்பின் தடங்கள் நெருப்பிலிட்டு
இல்லாமை ஒன்றே தமிழனதாய்
எழவே முடியா இயல்பினதாய் 
எம்மை எல்லோரும் ஆக்க முனைத்தனர்

விடுதலையின் விலங்ககற்ற 
வேதனைகள் பல விழுங்கி
வீரர்கள் பதித்த தடம் இன்னும்
ஈரமாய் எம் மண்ணில் இருக்கிறது
ஆன்மாவின் அடங்கா ஆவலுடன்
எங்கள் எழுகையை எதிர் பார்த்தபடி

அழிவின் அகழ்வைப் பிளந்து
அறிவின் செறிவைப் பகிர்ந்து
விடிவின் வெளிகள் கடந்து 
தடம்புரளா திடங்கொண்டு
தடைகள் தாண்டித் தடம் பதித்து
தமிழர் நாம் மீண்டும் தலைநிமிர்வோம்