Thursday 30 October 2014

மனிதர்கள் - கவிதை


மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர் ??????
நல்லவர் கெட்டவர் அறியாது
நயவஞ்சகப் பேச்சுக்கள் புரியாது
பல்லிளித்துப் பழகும் எவரையும்
பால்போல என நினைத்து .....

மற்றவர் மனதறியாது
மார்க்கம் எதுவும் தெரியாது
மதிநுட்பமும் புரியாது
மடையர்களாய் இன்னும் ....
தரம் பிரிக்கத் தெரியாது
தன் தரமும் அறியாது
தவிலின் பக்கங்களாய்
தம்பட்டம் அடித்தபடி......
மனதின் வலி புரியாது
மயக்கும் வார்த்தை கண்டு
மறையும் அறிவு கொண்டு
மறைந்து வாழ்ந்தபடி .......
காற்றுக் கொள்ளுமட்டும்
கதவு திறந்தாலன்றி
சுவாசம் நிலைத்திடாது
சுத்தமாய் ஆகிடாது ....
இறைவன் அறிவு தந்தான்
இயன்று பார்க்கச் சொன்னான்
சிந்தனைச் சிறகடித்து
சோர்வுகள் அறுத்து நீ
மாயைகள் மட்டற
மனதைப் படிக்கவேண்டும்
விந்தை மனிதா நீ
விழிப்புற வேண்டும் இன்னும்
சிந்தை முழுதும்
செழிப்புற வேண்டும்
பகுத்து அறியும் பக்குவம்
படித்து அறிதல் வேண்டும்

07.06.2014
Nivetha

No comments:

Post a Comment