Sunday 30 November 2014

வசந்தங்களாய்த் தொடரும் - கவிதை


வசந்தங்களாய்த் தொடரும்
வாழ்வின் அத்தியாயங்கள்
அப்பப்போ ஊடல் என்னும்
கீறல் விழுவதாய் மாறிப்போகிறது

நித்தமும் காணும் முகங்களுள்
நித்தியமாகிப்போன நிதர்சனம்
நம்பிக்கையின் கயிற்றால்
இறுக வரிந்து கட்டியபடி

எதிர்பார்ப்பின் ஏக்கத்தில் எழும்
முரண்பாடுகளின் மயக்கம்
முட்களாய் நாக்கின் மீதமர்ந்து
வார்த்தைகள் விதைக்கின்றன

வினைகளின் ஆழம் அறியாது
எதிர்ப்படும் எல்லாம் எதிராகி
எங்குமாய் சலசலத்து ஓடி
எல்லை தாண்டி நிறுத்துகின்றன

மனமே நீ மகிழ்வை மட்டும் நினை
மனது தாண்டி மதில் உடைத்து
இருப்பதை இழந்து ஏங்காது
நிறை கண்டு குறை கொன்று
நித்தமுமாய் மகிழ்ந்திடு நீ

நிவேதா உதயன்
13.11.2014

No comments:

Post a Comment