Sunday 30 November 2014

மண்ணிலிருந்து மரணம் வரை - கவிதை


மண்ணிலிருந்து மரணம் வரை

எங்களுக்காகத் தங்களை உதிர்த்து
எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து
உயிர் என்னும் கொடை தந்து
தம் உணர்வுகள் துறந்து நின்றார்

தாய் மண்ணின் தடையகற்ற
மன ஓசை அடக்கி மகிழ்வாய்
ஆசைகள் தாண்டி வந்தார்

பருவ வயதில் பாசம் அடக்கி
பசியடக்கிப் பலதும் அடக்கி
எதிரி அடக்கும் ஆசை கொண்டார்

எங்கள் நிலம் எமதேயாக
தங்கள் நிலம் தான் துறந்து
காடுமேடெல்லாம் கால் பதித்தார்

எத்தனை உயிர்கள் எம்மினமானதில்
அத்தனை பெரும் அவலம் தாங்கி
எத்தனை ஈனமாய் எருக்களாயினர்

எத்தனை தடைகள் எங்கு தாண்டியும்
அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும்
ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம்

தோல்வி கண்டு துவண்டோமாயினும்
தோள்கள் துடிக்க திருக்களமாடிய
துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம்

மண்ணை இழந்து மறுகினோமாயினும்
உதிரமிழந்து ஊனமாகி உருக்குலைந்து
மானம் காக்க மடிந்ததவர் மறந்திடோம்

வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன்
வேங்கையானவர் வீரம் மறந்திடோம்
கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய
கோட்டையின் வீரம் மறந்திடோம்
தோல்வி கண்டும் துவள்தல் இன்றி
துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம்
மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே
21.11.2014
நிவேதா உதயன்

No comments:

Post a Comment