Friday 14 August 2015

தத்தித் தவழ்ந்து நான்



 

தத்தித் தவழ்ந்து நான்
நடை பயில அன்று
அழகாய் கைகோர்த்து
அகமகிழ்ந்திருப்பார்
என் அப்பா

அ என நான் எழுத
என் விரல் அவர் பிடித்து
அழகழகாய் மண்ணில்
ஆசையாய் கோடுகள்
வரைந்திருப்பார்

அம்மா அப்பா எனும்
ஆரம்ப மந்திரத்தை
மழலை மொழியில்
நான் மிழற்றிடவே
மிக்க மகிழ்ந்திருப்பார்

செந்தமிழை நான் அன்று
செருக்குடன் கற்றிட
ஆக்கங்கள் பலசொல்லி
ஊக்கங்கள் தந்தெனை
அரவணைத்திட்டார்

எப்போது சென்றாலும்
இன்முகம் காட்டி
அன்பாய் அணைத்து
அகமகிழும் அப்பா
இன்றில்லை எம்மோடு

ஆனாலும் இம்முறை
அவரின்றி அவர் குரலின்றி
ஆரத்தழுவும் கைகளின்றி
பாசத்துடன் எமைப் பார்த்து
படத்தில் மட்டும் சிரித்தபடி


01.08.2015

No comments:

Post a Comment