Friday 14 August 2015

அன்று உன்னிடம்




அன்று உன்னிடம்
அன்பு மட்டுமே இருந்தது
என் உயிர்ப்பை இரட்டிபாக்குவதாய்
என் உணர்வை முழுமையாக்குவதாய்
என் அறிவை ஆராதிப்பதாய்
கருத்தின் கருவை ஆமோதிப்பதாய்
எந்நேரமும் என்னை மகிழ்விப்பதாய்
என்னை மறந்து நான் திளைக்க
எனக்காக அத்தனையும் செய்தாய்

இன்று உன்னிடம் ஒட்டியிருக்கும்
ஓரங்களில் மட்டுமானதான அன்பு
உதிரக் காத்திருக்கும் பூவின் இதழாய்
வருடலின்றி வாசனையின்றி
வருத்தம் மட்டும் தினம் தருவதாக
என் உயிர்ப்பைத் தொலைத்து
உள்ளத்தின் சுவர்களைத் தினம்
உளியாற் செதுக்குவதான வலியை
கணப்பொழுதுகளில் கூடக்
காரணமின்றித் தந்தபடி இருக்கிறது
05.08.2015

No comments:

Post a Comment