Saturday 26 April 2014

வண்ண முகம் கொண்டவளே

வண்ண முகம் கொண்டவளே
வடிவழகு யாழ்களமே
கண்ணழகு கொண்டவளே
கருத்தூன்றிப் பார்ப்பவளே
பன்முகம் கொண்டவளே
பவளவாய்ச் சொல்லமுதே 
பாடல் புனைகின்றேன்
பாராட்ட உன்னையடி
 
பதினாறு வயதில் பாவைநீ 
பார்த்து மயங்கிடும் அழகோடு
பருவ எழில் பொங்க
பார்ப்பவரை உன்பின்னே
அலைய வைக்கின்றாய்
 
கோல மயில் உன்னழகைக்
கண் குளிரக் காணவென்றே
கோடி மக்கள் நாடித் தினம்
காலநேரமின்றி
கண் விழித்து வருகின்றார்

கருத்தூண்றி உன்னைக்
கவனித்தும் வருகின்றார்

தம் திறமை காட்டி
உன்னைக் கவர்ந்திட
தம்மால் முடிந்த வரை
உன் தாள்களில் வரைகின்றார்
ஆசை மனம் காட்டி
ஆவலொடு நிதமும்
ஆர்பரிக்க நிற்கின்றார்

ஆனாலும் நீயோ
பகட்டில்லாப் பாவை
அனைவரையும் அரவணைத்து
ஆசைமுகம் காட்டாது
அன்பு மனம் காட்டி
ஆண் பெண் பேதமின்றி
அணைத்து நிற்கின்றாய்

நீ வாழி!
பல நூறு ஆண்டுகள்
பாரினிலே பவனிவந்து
பல்துறை சார்ந்து பேதமின்றி
பட்டொளி வீசிப் பறந்திட
பெண் மகளே நீ வாழி




No comments:

Post a Comment