Monday 22 April 2013

ஒழுங்காய்ச் சுற்றத் தொடங்கிவிடும்

ஆண்டு மூன்றுகள் ஓடி மறைந்தது
அத்தனை அவலம் நடந்து முடிந்தது
எத்தனை அழிவுகள் எம்மினம் கண்டது
இன்னும் தான் எனக்கு
மறக்கவில்லை

பண்பட்டு நாங்கள் பயணித்தோம்
பார் புகழ நாம் பார்த்திருந்தோம்
பச்சை வயல்களாய் எம் வாழ்வு
பரந்திருந்ததாய்க் கனவு கண்டோம்

பெண்ணின் சுதந்திரப் பெருமை கண்டோம்
போரில் அவர்தம் வீரம் கண்டோம்
எண்ணிலடங்கா எக்களிப்பில்
எதிரி அறியாதிருந்துவிட்டோம்

வண்ணக் கோலம் நாம் போட்டு
வட்டத்துள்ளே நாம் நின்றதனால்
எதிரி போட்ட கோலத்தை
எட்டிப் பார்க்க மறந்துவிட்டோம்

மானம் தானே பெரிதென
மாண்டுவிடும் மாண்புமிக்க
மானர்குலத் தமிழர் நாம்
மாளாதின்னும் இருக்கின்றோம்

எங்கள் நிலத்தை எடுப்பவனை
எங்கள் பெண்ணை வதைப்பவனை
ஏதும் செய்யாத் துணிவோடு
ஏனோ இன்னும் இருக்கின்றோம்

பாலுக்கழும் பாலகனுக்காய்
பிணம் தின்னும் பேய்களுக்குப்
பலியாகும் பெண்களுக்குப்
பார்த்திருக்கும் நீ என்ன செய்தாய்

அங்கம் இழந்து அரைப் பசியோடு
ஆட்கள் ஆயிரம் அங்கிருக்க
ஆடம்பரமாய் இங்கு நீ
ஆட்டம் போட்டுக் களிப்பதென்ன

பேதைமை கொண்ட பேடித் தமிழா
பெண்ணின் அடிமையாய்க் கிடந்தது போதும்
நாடே அற்று நடைப் பிணமாய்
நாங்கள் இன்னும் வாழ்ந்தது போதும்

ஊர் கூடி உலகு கூடி
உணர்வு கொண்டு நம் எழுந்திட்டால்
உலகம் கூட எமைக் கண்டு
ஒழுங்காய்ச் சுற்றத் தொடங்கிவிடும்

No comments:

Post a Comment