Monday 8 June 2015

வெறுப்பு - கவிதை

 https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSuVtkM2hV_MTX_GkbJxtHvHxj2CcSRRa5NwbnFzDqm-Xd0QMnR
ஆத்மாவின் அல்லோலகல்லோலங்கள் 
என்றும் அடங்கிடப்போவதில்லை
ஆதரவே அற்றதான அன்பில்
அடிமுடி தேடியும் எதுவுமே
அகப்படப் போவதுமில்லை

என் மீதான உச்சபச்ச வெறுப்பில்
உள்ளமெங்கும் வியாபித்திருக்கும்
உன்மத்தங்களை உடைத்தெறிந்து
உயிர் கொல்லும் ஊனங்களை எல்லாம்
உயிரற்ரதாக்கவே மனம் ஆசை கொள்கிறது

உறங்கா மனதில் எந்நாளும் எழும்
எண்ணிலடங்கா எதிர்ப்பார்ப்புக்களை
எதுவுமற்றதான எதிர்வினைகளால்
எள்ளளவேனும் இடைவெளியின்றி
ஏமாற்றம் எப்போதும் நிரப்பிவிட
எள்ளல்களின் எதிரொலியில் மனம்
எதுவுமற்றதாகி விடுகின்றது

காரணகாரியங்கள் என்றைக்குமாய்
காத்திருக்கவே போவதில்லை 
காலங்கள் கதியில் மாறினும்
கோலத்தில் குறுக்காய்க் கனவெழுதி
கொடுந்துயர் கொண்டு கணக்கெழுத 
கண்விழித்தே நான் காணும் கனவில்
கணக்கில்லா கண்டுபிடிப்புக்களும்
கண்முன்னாலே காணாமற் போகின்றன 

கார்காலக் கடுமை கருங்குளிராகி 
குற்றும் கூர்கள் கண்முன்னேயாகிலும் 
கனவும் கற்பனையும் காத்திருப்பும்
கணப்பொழுதும் நிலைபெயராது 
கந்தகக் காற்றாய் ஆனபின்னும்
காவலற்ற மனக்குரங்கின் கதிர்வீச்சில் 
கருகும் காலங்களின் அந்தரிப்பைக்
கணக்கிடவே எப்போதும் முடிவதில்லை


No comments:

Post a Comment