Tuesday 23 June 2015

யாதுமாகி - kavitha


 

நினைவுகளில் எல்லாம்
நிமிடத்தில் தீ மூளும்
நெஞ்சம் படபடத்து
நிலையின்றிக் கனவுகாணும்


மனதடக்க முடியாது
மட்டிலா மகிழ்வுகொண்டு
மிதக்கும் மனது கொண்டு
மேகத்தில் நடமாடும்

காட்டாற்று வெள்ளமாய்
காட்சிகள் சுழன்றாடும்
கவலைகள் சேர்ந்ததனால்
கள்ளம் குடிகொள்ளும்

எட்டாத கோட்டை எல்லாம்
எப்படியோ கட்டவைத்து
எதிர்பார்ப்பை ஏணியாக்கி
எங்கெங்கோஅலையவைக்கும்

பசிமறந்து தூக்கம் கெடும்
பலபாடல் மனமிசைக்கும்
பார்க்காதிருந்தாலே
பயித்தியம் பிடித்துவிடும்

கற்பனைக் குதிரைகளை
கணக்கின்றி அவிழ்த்துவிடும்
கடிவாளம் அற்றதாய்
காததூரம் ஓடவைக்கும்

உறவுகள் கண்மறைக்கும்
உற்றவர் தான் மறக்கும்
பெற்றவர் என்றாலும்
பேரிடராய்த் தோன்றிவிடும்

நித்தம் நினைவிழந்து
பித்தம் தலைக்கேறி
மற்றதெல்லாம் மறக்கவைத்து
சித்தம் கலங்கவைக்கும் காதல்
செத்தொழிந்து போனாலும்
சொத்தழிந்து போனாலும்
சித்தம் நிறைந்து சொர்க்கம் திறந்து
சொக்கவைப்பது காதல்

No comments:

Post a Comment