Friday 14 August 2015

வானவில்லின் நிறங்களாய்




 வானவில்லின் நிறங்களாய்
உன்னில் பல வர்ணம்
நேரத்துக்கொன்றாய்
நாளுக்கொன்றாய்
நிறம்மாறிக்கொண்டிருக்கிறாய் நீ

உன்மீது கொண்ட நம்பிக்கைகள்
இன்னும் வெள்ளை நிறமாகவே
என்னுள் இருக்கின்றன

காற்றடிக்கும் போதும்
கடும் மலையின்போதும் கூட அவை
நிறம்மாறும் நிலையற்று நிற்கின்றன

ஆனாலும் மனம் என்னும்
மாயக்கண்ணாடி
சூறைக் காற்றின் வாடையில் மெலிந்து
சுழல் காற்றில் சிக்கித் தவித்து
இழப்பை எதிர் நோக்கும் வலுவற்று
ஓடி ஒளிந்துகொள்ள இடம்தேடி
ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறது

மீட்க முடிந்தவன் நீ மட்டுமே
எனினும் பிடிப்பு எதுவுமற்று
பேரன்பு சிறிதுமற்று
பருவம் தப்பிக் காய்க்கும் மரமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ

என்ன சொல்லி என்ன
இயல்பே அற்ற உனக்கு
ஏற்புரை எது சொல்லினும்
எள்விளையா நிலமாய் உன்மனம்
இரக்கமற்றிருக்க எப்போதும்போல் நான்
எதுவுமே செய்ய முடியாது
பார்த்துக்கொண்டிருக்கிறேன்


08.07.2015

No comments:

Post a Comment