Sunday 30 November 2014

முந்தை வினை - கவிதை


முந்தை வினை முழுதும்
மூர்க்கத்துடன் அறுக்க முனைகிறேன்
ஆனாலும் முடிச்சவிழ்க்க முடியா
முடிவுகள் அற்றதாய் வாழ்வு
நீண்டுகொண்டே செல்கின்றது

பிறவிப் பயன் அறிந்திடா
பித்தம் தலைக்கேறிய மானிடராய்
பேசுபொருளாய் ஆனதில் வாழ்வு
படிந்தும் படியாமல் எப்பொழுதும்
பயத்துடனே நகர்கின்றது

பூனையில் காலின் எலியாய்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
அர்த்தமற்ற வாழ்வின் நகர்வில்
அகலமாகிக் கொண்டே செல்கின்றது
ஆழ்மனதில் அசைக்கமுடியாது
வேர்விட்ட நம்பிக்கைகள்

இறுகப் பற்றியிருக்கும் இளையின்
இறுமாப்பும் இன்னும் சிறிது நாளில்
இல்லாமல் போய்விடுவதற்கான
எல்லாக் காரணங்களும் எதிரிகளாகி
என் மனத்துடன் ஏளனமாய்ச் சிரித்தபடி
எதிர் யுத்தம் செய்கின்றன எனக்காகவே

ஆர்ப்பரிக்கும் மனதின் அவலம்
ஆழ்கடலில் மோசமாய்ச் சுழலும்
அமுக்கக் காற்றாய் அச்சமூட்டி
அசைக்கமுடியாதென எண்ணிய
ஆசைகளின் வேர்களை எல்லாம்
ஆட்டம் காண வைத்தபடியே
அடித்துச் செல்வதற்குத் தயாராய்
அங்கும் இங்கும் அலைந்தபடி
இறுதியான கணங்களை எண்ணிக்
கலக்கத்துடன் காத்திருக்கின்றன
30.11.2014
நிவேதா உதயன்

No comments:

Post a Comment