Saturday 7 November 2015

முதுமை






சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால்
கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது

பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது
நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது
பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும்
பழசெல்லாம் வந்து வந்து போகின்றது

காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி
கட்டிலே கதியென்று கிடக்கின்றேன்
தொட்டதுக்கும் துணைவேண்டி
துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன்

கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி
கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு
கண்பார்வை போயும் கனநாளாய்ப் போச்சு

கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை
கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை
கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை

பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை

பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை
பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்து நான்
பரிதவித்துக்கொண்டே இருக்கின்றேன்

எதிர்பார்த்து ஏங்கி நிற்க யாருமின்றி
இன்னும் ஏன் தான் இவ்வுலகில் ஆசைகொண்டு
இருப்போரை வருத்தி கூடகன்று போகாமல்
கொடும்கனலில் கூடுகாயக் காத்திருக்கிறேனோ

எல்லையற்ற ஏகாந்தவெளியில்





எல்லையற்ற ஏகாந்த வெளியில்
எண்ணங்கள் இனிமையாய்
சிறகடித்துப் பறக்கின்றன

மனதின் மகிழ்வில் வழிமாறி
வானத்தின் எல்லையெல்லாம்
தொட்டுவிட்டு நீளுகின்றன
வசந்தம் குவிந்த வாழ்வின்
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடிக்கும் சிந்தனைக் குவியல்கள்

தேன் நிரம்பி வழியும் வதையாய்
தெவிட்டும் வாழ்வின் தென்றலில்
தத்திநடைபோட்ட காலம் கூட
தென்றல் தொட்டு நீங்கும்
தென்னைமர ஓலைகளின் தெம்மாங்காய்
திக்கெட்டும் திண்ணென்று கேட்கின்றன

பாளை வெடித்த தென்னம் பூவில்
பட்டுத் தெறிக்கும் மழை நீராய்
சிலிர்ப்பில் மனம் சிறகடித்துப் பறக்க
வாழ்வில் வந்து போனவைகள்
வெண்பஞ்சு மேகக் குவியல்களில்
விரல் தொட்டு விளையாடிட மனம்
வீணான ஆசை கொள்கின்றது

ஆனாலும் ஓர்நாள் அணைந்திடும்
அத்தனையும் எம்முள்ளே எதுவுமற்று
அந்த வேளையின் அதிர்வுகள் தாங்க
ஆர்ப்பரித்த மனதை அடக்கி
ஏற்புடைய எண்ண அதிரவைத் தாங்க
எப்பொழுதுமான இயல்பின் நாளுக்காய்
என்னை நானே இசைபாக்குகிறேன்


அன்பெனும் ஆயுதம்





அன்பெனும் ஆயுதம் கொண்டு
அடக்குமுறைகள் அத்தனைகொண்டு
அளக்கமுடியா அன்பை நாளும்
அளந்திட முனைகின்றனர்

கரைந்தும் கரைத்திட முடியா
காலம் கரகங்கள் தினம் ஆட
கனதியாகும் மனதின் பாரத்திலும்
கல்லாக மறுக்கிறது மனம்

மூச்சுப் புக முடியா முடிச்சுக்களாய்
மனவறைகள் எங்கணும் இருக்கும்
உண்மைகளின் மாயங்களால்
மண்மூடிய மேடாய் கிடக்கிறது
மனிதமற்ற மாந்தமனம்

வேடங்கட்ட முடியவில்லை
வேறுபாடு தெரிந்த பின்னால் ஆயினும்
வேரறுத்து வெளிநடப்புச் செய்ய
வித்தையும் தெரியவில்லை

நிந்தனை என்மனதை நானே செய்தபடி
நித்தமும் நினைவின் கனம் துடைக்க
முத்தியடையா மனதின் மார்க்கம் தேடி
முன்வினைப் பயன் முடக்க நாளும்
முகமறுக்க முடியாது மருகுகிறேன்

ஏற்புடையதாயினும் ஏற்புடையதாகா






ஏற்புடையதாயினும் ஏற்புடையதாகா
எதிர்பாரா எதிர்வினைகள்

அதிர்வினது ஆற்பாட்டமற்ற அல்லல்
ஊழ்வினையின் ஊனுருக்கி ஊமையாக்க
ஊனறுக்கும் உணர்வின் கூற்று
ஊடறுத்து உள்ளம் கருக்கி நிற்கும்
வேரறுத்து வினைபுரியும் மரணவாசம்
வேதனையின் விளிம்புகளில் வெந்நீராய்
விழி நனைத்துத் தினம் வேடம் கட்டும்

பாரின் பாச வலையறுக்க பற்றுழன்றுகூடி
பாவச் சுமைகள் எண்ணப்படுகையில்
படிகள் கடந்து ஒவ்வொன்றாய் தாண்டி
பற்றின் பக்குவமற்ற நிணங்களின் தோற்றம்
பார்வை மறைத்துத் தினம் சுமை கூட்ட
மரணத்தின் மணம் தெரிந்து மண்டியிடுகையில்
மனக்குரங்கு ஒவ்வொன்றாய் மீட்டல் செய்யும்

என்ன எண்ணி என்ன எப்போதுமே
ஏக்கமும் கோபமும் எள்ளலும் எகிறலும்
எல்லாம் முடிந்தபின் தான் எல்லை காட்டும்

பெருவெளியின் தனிமையில்




பெருவெளியின் தனிமையில்
நான் காத்திருக்கிறேன்

ஓசைகள் அடங்கியதான
காட்சிகள் அற்றத்தான
அண்டத்தின் ஒருவெளியில்
அணைத்திடும் கைகளற்று
அலைந்திடும் மனது கொண்டு
ஆதங்கத்தில் ஆவிசோர
மீட்சியற்றுக் காத்திருக்கிறேன்

அன்பென்னும் அரிச்சுவடி


 
 
 
 
 
அன்பெனும் அரிச்சுவடி கொண்டு
அத்தனை உயிர்களும் உலகில்

ஆலமரமாய் விழுதுகொண்டு
ஆணிவேர்வரை ஊன்றியபடி
இலவம் பஞ்சாய் அப்பப்போ
இல்லாமலும் போய் விடுகிறது

ஈனர்கள் சிலர் இற்றவராய்
ஈனவே மனமற்று அன்பை
உணர்வுகள் உக்கிப்போக
உலர்ந்துபோக வைக்கின்றனர்

ஊனமுறு மனது கொண்டு
ஊழ்வினை புரிகின்றனர்
எத்தனை ஏதம் வரினும் பலர்
எந்திரங்களாய் எதுவும் தாங்கி
ஏக்கம் மட்டும் எதிர்வு கூறிட
ஏதுமற்றுக் காத்திருக்கின்றனர்

ஐயத்தின் அதிர்வுகளில் எல்லாம்
ஐம்பொறியும் அடங்கிவிட
ஒற்றை மரக் கிளையாய்
ஒன்றிணைய முடிய மனதை
ஓசையின்றி ஒடுங்கச் செய்து
ஓலங்களை ஒலியிழக்கச் செய்து
ஔடத்தின் வீரியத்தில்
ஔவியம் கொண்டபடியே தினம்

வசந்த வாழ்வில்








வசந்த வாழ்வில்
வகைப்படுத்த முடியாத
பல வண்ணங்கள்
வாழ்வின் நீட்சியைக்
கூட்டுவதும் குறைப்பதுமாய்

வேண்டுவன எல்லாம்
வந்துவிடா வாழ்வில்
வேண்டாதவையாய்
சில வல்லினங்கள்
வார்த்தை அடுக்குகளில்
வில்லங்கமாய் வந்தமர்ந்து
அவிழ்க்க முடியாத முடிச்சை
அர்த்தமற்றுப் போடுகின்றன

ஆனாலும் வாழ்வு
நியதிகளின் நிர்ப்பந்தங்களில்
நேற்றும் இன்றும் நாளையும்
சுவாசம் நிறைக்கும் காற்றாய்
நிழல்களும் நிணங்களுமாய்
மனக்கதவின் விளிம்புதடவி
முகமற்ற உருவங்களாய்த் தினம்
முட்டிமோதிப் போகின்றன

Tuesday 25 August 2015

உருவமில்லா ஓசை

Nivetha Uthayan's photo.

உருவமில்லா ஓசை கேட்டு மனம்
உன்னிடம் பித்தாய் ஆனது
உவப்புடன் தினமது ஓங்காரமாகி
உறவு கண்டிட உன்மத்தம் கொண்டு
உன்னைத் தினம் எதிர்பார்த்தது

உயிரின் நிகரிலா உணர்வாய்
உரிமைகொண்டே நீ வந்தாய்
உயிரில் கலந்த உறவே என்றாய்
உயிர் தினம் உனக்காய்த் துடிக்கிறதென்றாய்
உன்முகம் காணத் தவிக்கிறதென்றாய்

உண்மை என்றெண்ணி உயிர் துடிக்க நான்
உன்னில் அன்றே கலந்துவிட்டேன்
உலகு முழுதும் எனக்காய் என்று
உயிர்ப்புடன் நானும் உலவிவந்தேன்
உளம் எங்கும் உவகை கொண்டிட
உற்றவனாய் உட்பொருளாய் கண்டிட
உயிர் கூடி உணார்வுகொண்டிட
உனையே நானாய்க் கண்டிருந்தேன்

ஊனமுற்றதாய் ஆனதுன் உறவு
உயிர் குடிக்கும் விதமாய் மனது
உண்மை கொன்று உள்ளம் தின்று
ஊசலாடும் மனதும் கொண்டு
உணர்வுகளைத் தினமும் கொன்று
உள்ளத்தின் இரக்கம் துறக்க
உயிரின் வலி அறிய மறுத்து
உயிர்ப்பிழந்து உடல் சுமக்க
உறுதுணையாய் நிற்கின்றாய்

உனைத் துறந்து நிதமும் நான்
உயிர் காவும் வழியும் இன்றி
உடல்க் கூண்டு ஓசை இழக்க
ஒப்பாரியின் ஓசைகளில்
உறக்கமின்றித் தவிக்கின்றேன்

எனக்காக

 Nivetha Uthayan's photo.


எனக்காக நீ என்றும் தவித்ததில்லை
எனக்காக எதையும் நீ இழந்ததில்லை

உனக்காக நான் என்றும்
நினைவுகளுடன் போராடி
உன் துயரில் நான் அழுது
உன் நோயில் நான் துவண்டு
நீ நனைந்தால் நான் குளிர்ந்து
நெருப்பின் சுவாலைக்குள் தினம்
நீந்தியபடி நடக்கின்றேன்


உனக்காக என்னை நான்
இழந்தது போதும்
உன்னிடம் என்றும் நான்
தோற்றதும் போதும்
உயிர் கொல்லும் நோயாய்
உன் செயல்களில் தினம்
வலிதாங்கி வலிதாங்கி
ஊனுருக்கி உருக்குலைந்து
உணர்வுகளின் எச்சங்களில்
உயிர் வாழ்ந்ததும் போதும்

இனி எனக்காக நான் வாழ்ந்து
என் நினைவில் நான் எரிந்து
உன் நினைவை உருக்கிவிட
எப்போதும் போலன்றி
எல்லைகள் தாண்டியும்
எதிரியாகும் உன்னினைவை
ஏதுமற்ற வெளி தாண்டி
எண்ணதுளியின் சுவடு கூட
எதுவுமின்றித் தொலைத்துவிட
இடம் தேடி அலைகின்றேன்

Friday 14 August 2015

ஏக்கம் சுமந்து







உரிமையற்ற ஒன்றிற்காய்
உளம் ஏங்கி உயிர் துடிக்கும்
கருணையற்ற மனிதருக்கு
காணும்வலி
கணம்கூட உணராது

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்து  நிகழ்வுகளின்
சொல்லொணாத் துயர் சுமந்து
சொல்லி அழாச் சுமைகளுடன்
காத்திருக்கும் கணங்கள் கவி
சொல்லிட முடியாது

காலாண்டு கூடவில்லை
கடல்போல் அன்பு

காட்டாற்று
வெள்ளமாய்
கரையுடைக்க
காலத்தின் வரவுக்காய்
காத்திருக்க மட்டுமே
முடிகிறது முடிவின்றி

முடிவேதுமில்லா
அண்டப் பெருவெளியில்
அரவமற்று அனாதையாய்
நிற்பதாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின்
கொடுமையில்
உறக்கம் மட்டுமா
தொலைந்து போவது???

காதலின் சரணடைவு




 காதல்

கற்பனையில் எண்ணியவை
உன்னிடம் கண்டதனால்
காதல் கொண்டேனடா
காலமெல்லாம் காத்திருந்து
உன்னைக் கண்டேனடா

கண்ணிமை மூடினும்
என்முன்னே நின்று
காதல் செய்கிறாய்
காதினிக்க  வந்து
காதல் மொழி பேசுகிறாய்

கயவனே உன்னைக்
காணாதிருந்திருந்தால்
காலமெல்லாம் நான்
கற்பனையில் வாழ்ந்திருப்பேன்

கண்டதனால்
நிதம் என் உயிர் துடிக்க
நினைவு நிதம் வதைக்க
நேர காலம் தெரியாது
நெகிழ்ந்து போய் கிடக்கிறேன்.

நெருப்பாய் இருந்தவள்
நெக்குருகி நிற்கிறேன்
நெஞ்சம் முழுதும்
உன்னை நிரப்பி
நினைவில் உன்னை முகர்ந்து
நித்தம் உனக்காய்
காத்திருக்கிறேன்

முகம் பார்க்க முடியாமல்
சத்தமிலா முத்தமின்றி
சர்வமும் இழந்து
சரணடயக் காத்திருக்கிறேன்
உணர்வாயா ?????????



யாதுமாகி நிற்பான் அவன்


எனக்கே ஒண்டுமா விளங்கேல்ல. உங்களுக்கு விளங்குதோ ?????



யாதுமாகி நிற்பான் அவன்
எதுமாகி நிற்பான் அவன்
எனக்குள்ளே அவனாகி
எதற்குள்ளும் அவனேயாகி
உயிரின் உணர்வாகி
உணர்வெல்லாம் அவனாகி
ஊக்கியாய் ஆக்கியாய்
அகமெங்கும் நிறைப்பவன்
அருமருந்தாகி அரிதாகி
ஆட்கொள்ளும் விடமாகி
அகடனாய் அறிவொழுக
ஆட்கொண்டு நிற்பான் அவன்
என் ஆகுபொருள் அவனேயாக

feeling confused.

01.07.2015

விலக மறுக்கும் கிரகணங்கள்



 



அன்பென்னும் வார்த்தையை
ஆயுதமாக்கி மூடர்
ஆசை என்னும் வினை விதைத்து
எம்மை அடக்கிடுவார்

ஆதி மூலமே நீ என்பார்
அடியில் கிடக்கும் மலர் தாம் என்பர்
முற்பிறப்பு தொடருதென்பார்
முடிவின்றி முடிவுவரை
மூலாதாரமாய் இருப்பேன் என்பார்

தேவைக்காய் தேடிவந்து
திக்குமுக்காட்டி எமை
தெருவில் விடுவதற்காய்
தெவிட்டத் தெவிட்டப் பேசி
தம்மை எம்முள் விதைத்திடுவார்

தேவைகள் முடிந்தபின்னே
தெரியாத யாரோபோல்
திடமுடிவெடுத்து எம்மைத்
திக்குமுக்காட வைப்பார்
தெருவிலும் விட்டுடுவார்

எதற்காய் எம்மைப் படைத்தான்
எதுவுமற்று ஏங்கிடச் செய்து
இரக்கமற்று இதயம் உடைத்து
தயக்கமற்று தடைகள் கொண்டு
சிலதுக்காகச் சிந்தை தகர்த்து
மனது கொன்று மகிழ்வு கொன்று
திடம் கொண்டு திறமை தகர்த்து
வதை கொண்டு வாழ்வு தகர்க்க
எதற்காய் எம்மைப் படைத்தான்
02.07.2015

ஒவ்வொரு தடவையும்



 

ஒவ்வொரு தடவையும் உன் அலட்சியம்
என் மனதை உருக்குலைக்கவே செய்கிறது.
ஆனாலும் என் அன்பின் அச்சாணியும்
கூடவே உன்னுடன் இறுக்கமாக
பிணைக்கப்பட்டுள்ளதால்
உன்னைத் தூக்கி எறிந்து விட்டு
என்பாட்டில் இருந்துவிட முடியாது
என்னை நானே வருத்தியபடி
தவமிருக்கிறேன் உனக்காக

ஆனாலும் ஏமாற்றமும்
அதன் எதிர்வினைகளும்
எனக்கு மட்டுமே சொந்தமாக
எக்கணமும் அத்தனையும் விழுங்கி
என் மனம் கொண்டிடும் ஏக்கம் எப்போதுமாக
எதுவும் செய்வதற்று ஏங்கும் மனதின் மூச்சடக்கி
ஏமாற்றத்தின் ஒலியடங்க
எண்ணப்பிரளயத்தின் நடுவில் நிற்கிறேன் நான்

ஆனாலும் எப்போதும்போல்
அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல்
கேட்டுக்கொண்டே இருக்கிறது
தோற்றுக்கொண்டிருப்பது நானா நீயா என ??????
06.07.2015

வானவில்லின் நிறங்களாய்




 வானவில்லின் நிறங்களாய்
உன்னில் பல வர்ணம்
நேரத்துக்கொன்றாய்
நாளுக்கொன்றாய்
நிறம்மாறிக்கொண்டிருக்கிறாய் நீ

உன்மீது கொண்ட நம்பிக்கைகள்
இன்னும் வெள்ளை நிறமாகவே
என்னுள் இருக்கின்றன

காற்றடிக்கும் போதும்
கடும் மலையின்போதும் கூட அவை
நிறம்மாறும் நிலையற்று நிற்கின்றன

ஆனாலும் மனம் என்னும்
மாயக்கண்ணாடி
சூறைக் காற்றின் வாடையில் மெலிந்து
சுழல் காற்றில் சிக்கித் தவித்து
இழப்பை எதிர் நோக்கும் வலுவற்று
ஓடி ஒளிந்துகொள்ள இடம்தேடி
ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறது

மீட்க முடிந்தவன் நீ மட்டுமே
எனினும் பிடிப்பு எதுவுமற்று
பேரன்பு சிறிதுமற்று
பருவம் தப்பிக் காய்க்கும் மரமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ

என்ன சொல்லி என்ன
இயல்பே அற்ற உனக்கு
ஏற்புரை எது சொல்லினும்
எள்விளையா நிலமாய் உன்மனம்
இரக்கமற்றிருக்க எப்போதும்போல் நான்
எதுவுமே செய்ய முடியாது
பார்த்துக்கொண்டிருக்கிறேன்


08.07.2015

நெஞ்சக் கூட்டில் பிரளயம்





கோபத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டு
கோடுகிழித்து நிறுத்தமுடியாதவாறு
கற்பனைகளின் கதவுகள் திறந்து
கடிவாளமற்றுக் குதிரைகள் பாய்கின்றன

நம்பிக்கைகள் சிதைவதான கற்பனையில்
நலிந்து குலைந்து நகர்வதற்கே
நாதியற்று நிற்கையில்
விருப்பும் வெறுப்புமாய் விதைக்கப்படுகின்றன
விளைய முடியாத விதை நாற்றுக்கள்

வார்த்தைகளும் அகராதியில் காணமுடியா
அதன் அர்த்தங்களும் கடைபரப்ப
இதயச் சுவர்கள் எங்கும் இடிமுழக்கங்களாய்
இல்லாத வார்த்தைகள் எல்லாம் கூடி
இதயத் துடிப்பை இரட்டிப்பாக்குகின்றன

துடிப்பின் ஒலி காதில் வேகமாய் மோத
விரைந்து பாயும் இரத்தத்தின் வேகம்
நரம்புக் குழாய்களில் நகரும் வேகத்தில்
நாடிகள் எல்லாம் வலுவிழந்து
நடுக்கங்களை உடலெங்கும் பரப்ப
மூளையின் கதவுகள் வலுவுடன் திறக்க
நரம்பின் வெடிப்பில் நனைந்த தசைகள்
கடிவாளமிடவே முடியாதனவாகி
கால்கள் மடிந்து கண்கள் சொருக
காற்றின் கனதி கலைந்து போகிறது


09.07.2015

இமை மூடா நினைவுகள்





நினைவுகளின் நிர்வாணத்தை
மறக்க மறுக்கும் மனதை
என்ன செய்வது

மறுதலித்தே தொகுத்து
மீண்டும் மீண்டுமாய்
மாயக்கண்ணாடியில் பார்ப்பதாய்
நிழல் பிம்பத்தைத் தோற்றுவித்து
நிலைதடுமாற வைக்கிறது

காரணமின்றி கண்முன் தோன்றும்
கனவற்ற காட்சிகளின் சாட்சி
வேண்டுவன எல்லாம் எப்போதும்
காரியங்களோடு கைகோர்த்தபடி
காயங்களை காணும் இடமெங்கும்
கண்மூடி விதைத்தபடி செல்கின்றன

காரணங்கள் அற்று நானும்
காணவே முடியாதனவற்றை
காண்பதான மாயை சுமந்து
மீண்டுவரா நாட்களின் தகிப்பில்
மனதின் மகிழ்வு தொலைய
எந்நேரமும் விடுபட எண்ணிடும்
நூலிழை பற்றியே நிதமும்
எழுந்துவர எத்தணித்தபடியே
எதுவும் முடியாது காத்திருக்கிறேன்


18.07.2015