Saturday 7 November 2015

முதுமை






சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால்
கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது

பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது
நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது
பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும்
பழசெல்லாம் வந்து வந்து போகின்றது

காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி
கட்டிலே கதியென்று கிடக்கின்றேன்
தொட்டதுக்கும் துணைவேண்டி
துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன்

கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி
கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு
கண்பார்வை போயும் கனநாளாய்ப் போச்சு

கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை
கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை
கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை

பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை

பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை
பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்து நான்
பரிதவித்துக்கொண்டே இருக்கின்றேன்

எதிர்பார்த்து ஏங்கி நிற்க யாருமின்றி
இன்னும் ஏன் தான் இவ்வுலகில் ஆசைகொண்டு
இருப்போரை வருத்தி கூடகன்று போகாமல்
கொடும்கனலில் கூடுகாயக் காத்திருக்கிறேனோ

No comments:

Post a Comment