
கோபத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டு
கோடுகிழித்து நிறுத்தமுடியாதவாறு
கற்பனைகளின் கதவுகள் திறந்து
கடிவாளமற்றுக் குதிரைகள் பாய்கின்றன
நம்பிக்கைகள் சிதைவதான கற்பனையில்
நலிந்து குலைந்து நகர்வதற்கே
நாதியற்று நிற்கையில்
விருப்பும் வெறுப்புமாய் விதைக்கப்படுகின்றன
விளைய முடியாத விதை நாற்றுக்கள்
வார்த்தைகளும் அகராதியில் காணமுடியா
அதன் அர்த்தங்களும் கடைபரப்ப
இதயச் சுவர்கள் எங்கும் இடிமுழக்கங்களாய்
இல்லாத வார்த்தைகள் எல்லாம் கூடி
இதயத் துடிப்பை இரட்டிப்பாக்குகின்றன
துடிப்பின் ஒலி காதில் வேகமாய் மோத
விரைந்து பாயும் இரத்தத்தின் வேகம்
நரம்புக் குழாய்களில் நகரும் வேகத்தில்
நாடிகள் எல்லாம் வலுவிழந்து
நடுக்கங்களை உடலெங்கும் பரப்ப
மூளையின் கதவுகள் வலுவுடன் திறக்க
நரம்பின் வெடிப்பில் நனைந்த தசைகள்
கடிவாளமிடவே முடியாதனவாகி
கால்கள் மடிந்து கண்கள் சொருக
காற்றின் கனதி கலைந்து போகிறது
09.07.2015
No comments:
Post a Comment