Friday 14 August 2015

நெஞ்சக் கூட்டில் பிரளயம்





கோபத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டு
கோடுகிழித்து நிறுத்தமுடியாதவாறு
கற்பனைகளின் கதவுகள் திறந்து
கடிவாளமற்றுக் குதிரைகள் பாய்கின்றன

நம்பிக்கைகள் சிதைவதான கற்பனையில்
நலிந்து குலைந்து நகர்வதற்கே
நாதியற்று நிற்கையில்
விருப்பும் வெறுப்புமாய் விதைக்கப்படுகின்றன
விளைய முடியாத விதை நாற்றுக்கள்

வார்த்தைகளும் அகராதியில் காணமுடியா
அதன் அர்த்தங்களும் கடைபரப்ப
இதயச் சுவர்கள் எங்கும் இடிமுழக்கங்களாய்
இல்லாத வார்த்தைகள் எல்லாம் கூடி
இதயத் துடிப்பை இரட்டிப்பாக்குகின்றன

துடிப்பின் ஒலி காதில் வேகமாய் மோத
விரைந்து பாயும் இரத்தத்தின் வேகம்
நரம்புக் குழாய்களில் நகரும் வேகத்தில்
நாடிகள் எல்லாம் வலுவிழந்து
நடுக்கங்களை உடலெங்கும் பரப்ப
மூளையின் கதவுகள் வலுவுடன் திறக்க
நரம்பின் வெடிப்பில் நனைந்த தசைகள்
கடிவாளமிடவே முடியாதனவாகி
கால்கள் மடிந்து கண்கள் சொருக
காற்றின் கனதி கலைந்து போகிறது


09.07.2015

No comments:

Post a Comment