Friday 5 August 2016

வாழ்வு வதையாகி - சிறுகதை


கி பி அரவிந்தனின் நினைவாக நடைபெற்ற சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற எனது கதை




வாழ்வு வதையாகி



காற்றுடன் மழையும் சுழன்றாடுவதை அந்த அறையின் சாளரத்தினூடு பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாந்தினி. சாதாரண ஆடை தான் அணிந்திருக்கிறாள். ஊசிக் காற்றில் சாளரக் கண்ணாடிகளையும் ஊடுருவிக் காற்று சிறிதாக உள்ளே வந்தபடி தான் இருக்கிறது. ஆனாலும் சமரில் வெப்பமாக இருப்பதுபோல் அறை கதகதப்பாக இருப்பதனால் குளிரவே இல்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இந்த நாட்டில் வாழ்ந்து முடித்து விருட்சமாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என........ கையில் வைத்திருக்கும் காகிதங்களைக் குனிந்து பார்த்தாள். காகிதங்கள் காற்றுப் பட்டு ஆடுகின்றனவா ?அல்லது தன் மனதின் அதிர்வில் ஆடுகின்றனவா என்று புரியவில்லை சாந்தினிக்கு.
எல்லாம் ஓய்ந்து போகப் போகிறது. இந்த உலகம், ஊர்கள், உறவுகள், நண்பர்கள் தெரிந்தவர் போனவர் எல்லாமே என எண்ணியபோது சாந்தினிக்கு மனம் எண்ண முடியாத வேதனையை உணர்ந்தது. எத்தனை காலம் அவள் இப்பூமியில் வாழ்ந்துவிட்டாள். எண்ணிலடங்கா மகிழ்வை அனுபவித்திருந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக மனதில் எழும் வேதனை சொல்ல முடியாததாகி மனதுள்ளே குமைந்து குமைந்து அவள் அனுபவிப்பதை என்னவென்று சொல்லி யார் விளங்கி ......
சில நாட்களாக அவள் மனதிலோடும் எண்ணத்தைச் செயற்படுத்தும் துணிவு அவளுக்கு இருக்கிறதுதான் எனினும் இவ்வுலகில் மீண்டும் இந்த உறவுகளுடன் வாழவே முடியாதே என்னும் ஏக்கமும் அதனால் எழும் அங்கலாய்ப்புமே அவளை அடிக்கடி துன்புறுத்திய வண்ணம் இருக்க, இன்னும் கொஞ்ச நாட்கள் அல்லது மாதங்கள் பொறுத்திருப்போம் என மனம் ஆசை கூட்ட, கண்களை மூடி ஒரு ஐந்து நிமிடங்கள் இருந்தவள், மனதைத் திடப்படுத்திக்கொண்டு அந்தப் படிவத்தில் கையொப்பம் இட்டு மேசையில் வைத்தாள்.
*****************************************************************************
சாந்தினி குளிராடைகள் அணிந்துதான் இருக்கிறாள். கீற்றர் இன்னும் போடப்படவில்லை. மகன், மருமகள்,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை. இன்று சனிகிழமை என்பதால் அவர்கள் எழும்ப எட்டு ஒன்பது செல்லும். அவர்களுக்குக் குளிர்ந்தால் மட்டும் தான் இந்த வீட்டில் கீற்றர் போடுவார்கள். இவளுக்குக் குளிரும் என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை. இரண்டு மூன்று தரம் இவளும் குளிருது எண்டு மகனிடம் சொல்லிப் பார்த்ததுதான். "வெள்ளன எழும்பி என்ன அம்மா செய்யப் போறியள். படுத்து இருக்கிறதுதானே" என்றதுடன், "நல்ல மொத்த யம்பரைப் போட்டுக்கொண்டு காலுக்கு பெட்சீற் சுத்திக்கொண்டு இருந்தால் குளிராது தானே அம்மா" என்றதன் பின்னர் சாந்தினி ஒன்றும் சொல்வதேயில்லை.கால்கள் இரண்டும் செயலிழந்து சுரணையே இல்லையே. இதில் கால் ஏன் குளிரபோகுது? உடல் எல்லோ குளிருது என்று சொல்ல எண்ணியதையும் சொல்லாது மனதில் மட்டுமே சொல்லிக்கொண்டாள்.
சின்ன வயதில் இவனுக்குக் குளிரும் என்று தேடித்தேடி உடுப்புகள் போட்டுவிடுவதும், இவன் களட்டி எறியும் சொக்சைப் பார்த்துப் பார்த்துப் போடுவதிலுமே இவளின் நேரம் பாதி போய்விடும்.
முன்பெல்லாம் இவளுக்குக் குளிர்வதில்லை. கீற்றர் போட்டவுடன் மூக்குக் கண் எல்லாம் கடிக்கும். உடல் வேர்க்கும். இருந்தாலும் பிள்ளையளுக்குக் குளிருமே எண்டு இவள் தன் துன்பத்தைச் சகித்திருக்கிறாள். இப்பவும் அதேதான் தொடர்கிறது.
இப்ப கொஞ்ச நாளாத்தான் இவளுக்கு வெள்ளனவே விளிப்பு வந்துவிடுகிறது. நாள் முழுதும் தூங்குவதும், தூங்காமல் விழித்திருப்பதும், எழுந்தால் இந்த யன்னலூடு வெளியே பார்ப்பதும் தானே இவளது வேலை .
சாப்பிடும் வேலையும் இருக்குத்தான். ஆனாலும் அதுக்குக் கூட இப்ப மனம் வருகுதில்லை. கீழே ஒரு அறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் என்ன செய்வது இந்த மகனின் வீடு அத்தனை வசதியாக இல்லை. இவன் சுதன் நினைத்தால் கீழே ஒரு அறையைக் கட்ட முடியும் தான். மருமகள் விட மாட்டாளே. கீழே ஒரு சிறிய அறை இருக்கிறதுதான். அங்கே இவளை மாற்றி விட்டால் நன்றாக இருக்கும் என எத்தனையோ நாட்கள் இவள் எண்ணியிருக்கிறாள். ஆனால் வாய் திறந்து ஒருமுறை கேட்டதோடு சரி. அந்த அறையில் பிள்ளைகள் படிப்பதற்கு எனக் கணனியும் மேசை கதிரைகளும் புத்தக அலுமாரியுமாக.....
அப்பப்போ பிள்ளைகள் மகன் மருமக்கள் எல்லாம் சிரித்துக் கதைப்பது கேட்கும். தானும் அவர்களுடன் சேர்ந்து கதைக்க மனம் ஏங்கும். பேரப்பிள்ளைகளின் கதைகளை, அசைவுகளை, சின்னச்சின்ன சண்டைகளை மருமகளின் வெருட்டல் உருட்டலையும் மகனின் அடங்கிய குரலையும் கேட்கக்கேட்க நடக்கேலாமல் படுத்திருக்கிறேனே என்னும் வெறுப்பும் கூடவே எழும். பிறகும் எதுவுமே செய்ய முடியாது ஆசைகளை ஆதங்கங்களை அடக்கியபடி சும்மா இருக்கத்தான் முடிகிறது.
கடந்த ஆண்டுவரை அவளது நண்பி பாமா இவளுக்கு மிக்க துணையாக அடிக்கடி தொலைபேசியில் கதைத்து இருவரும் தத்தமது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். அதற்கும் மருமகள் புறுபுறுப்பதுதான் என்றாலும் சாந்தினி அதை விளங்கியதுபோல் காட்டிக்கொண்டதே இல்லை. அவள் திடீரென இறந்த பின்னர் சாந்தினிக்கு நடுக்காட்டில் யாருமின்றி விட்டதுபோல் பயமும், தனிமையும், சுய பச்சாதாபமும் மேலோங்கி வயோதிகத்தைப் புரிந்து கொள்ளா மனிதர்களுடன் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது பெரும் பாடாய்ப் போனது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்று காலை அவள் நித்திரையால் எழும்பினாலும் பல் தீட்டாது கன நேரமாய் படுத்தே இருந்தாள்.
வைத்தியசாலை போல் இருந்தாலும் இவர்கள் எல்லாம் எத்தனை சகிப்புத் தன்மையோடு எம்மை எல்லாம் பராமரிக்கின்றனர் என எண்ணியபோது வியப்பாக இருந்தது. இவள் மணியை அழுத்த அவர்கள் இவளுக்கு பல்லுத் தீட்ட, சிறுநீர் கழிக்க, குளிக்க என்று எந்த முகச்சுளிப்புமின்றி எல்லாம் செய்து உடை மாற்றி மீண்டும் கட்டிலில் கொண்டுவந்து விட்டபின், உனக்கு விருப்பம் என்றால் உன்னுடன் நிற்பதர்க்கு உன் பிள்ளைகளை நீ அழைக்கலாம் என்று கூறிவிட்டு இவளை அன்போடு பார்த்தாள் அந்தப் பெண். வேண்டாம் என்ற சாந்தினியின் தலையாட்டலை விளங்கிக்கொண்டு இவளுக்குக் காலை உணவை இவளுக்குப் பக்கமாக நகர்த்திவிட்டுச் சென்றபின், கண்களில் கண்ணீர் முட்டி வழிவதா வேண்டாமா என்று காத்திருக்க, பிள்ளைகளைக் கண்டால் என்னையறியாமலே என் மனம் மாறியும் விடலாம் என்று எண்ணியவளாய், உணவை மெதுமெதுவாய் இருக்கும் சொற்ப பற்களால் கடித்து உண்ண ஆரம்பித்தாள் சாந்தினி.
கணவன் இருந்த வரை அவளை எல்லோரும் மரியாதையுடன் தான் நடத்தினார்கள். ஏனெனில் கணவனும் அவளும் தனி வீட்டில் சுதந்திரமாக இருந்து, சமைத்துச் சாப்பிட்டுக் கோவிலுக்குப் போய் எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது அவர் இறக்கும் மட்டும். ஐம்பது ஆண்டுகள் கூடிவாழ்ந்த அவர் இறந்தபின் அதிர்ச்சியில் அவளுக்கு பாரிசவாதம் வந்து ஆறுமாதங்கள் படுத்த படுக்கையாய் வைத்தியசாலையில் இருந்து அவளுக்கு நோய் பாதி குணமாகி வீட்டுக்குப் போகலாம் என்றபோதுதான் பிள்ளைகளுக்கிடையில் அம்மாவை யார் வைத்திருப்பது என்று பிடுங்குப்பாடு வந்தது. கடைசியில் கடைசியாகப் பெற்ற சுதன், தான் தாயை வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டான். நடக்க முடியாமல் இருப்பவரை வைத்திருக்க ஆருக்குத்தான் ஆசை வரும் என்று இவளுக்குமே புரிய "அந்தாளோட நானும் போயிருக்கக் கூடாதா? கடவுளே நான் என்ன பாவம் செய்தன் இப்பிடிக் கிடக்க" என்று மனதுள் அழ மட்டுமே முடிந்தது.
முன்பெல்லாம் காலை எழுந்து குளித்துவிட்டு வந்து தான் மிச்ச வேலை எல்லாம். இப்ப வாரம் இருமுறை என்றிருந்து ஒருமுறைதான் முழுக்கு என்றாகிவிட்டது. இவளால் தனிய கன நேரம் நின்று குளிக்கமுடியாது. ஒருக்கா இவள் தடக்கி விழுந்த பிறகு, தான் நிக்கும்போதுதான் குளிக்கவேணும் என்று மகன் சொல்லிவிட்டான். அதன் பிறகு மாலையில் மகன் வேலையால வந்த பிறகுதான் குளிப்பு முழுக்கு எல்லாம். தோலெல்லாம் சுருங்கி வற்றிவிட்டாலும் குழந்தைப் பிள்ளையைப் போல் மகன் சாந்தினியைத் தூக்கிக்கொண்டு போய் கதிரையில் இருத்தி குளிக்க வாக்க தன்னை அறியாமலே ஒரு கூச்சம் எழும். ஆனாலும் அடக்கியபடி இருக்கத்தான் முடிகிறது.
இப்ப கொஞ்ச நாளா இடுப்புக்குக் கீழே உள்ள பாகங்கள் செயலிழக்கத் தொடங்கிவிட்டன. இனிமேல் அதுக்கும் மற்றவரை எதிர்பார்த்து அவர்களின் முகச்சுளிப்போடு ....... நினைத்துப் பார்கவே முடியவில்லை அவளால். அந்த நிலை வரும்வரை இருக்கக் கூடாது என்ற வைராக்கியம் மட்டும் மனதில் எழுந்தது.
சுதன் ஒன்றும் சும்மா வைத்திருக்கவில்லை சாந்தினியை. கவுன்சிலில் இருந்து தாயைப் பராமரிக்க என்று குறிப்பிட்ட தொகையைப் பெறுகிறான் தான். ஆனாலும் தாய்க்கு தான் எந்த உதவியும் பெற்றுக்கொள்ளாமல் தன் செலவில் பார்ப்பதுபோல் தான் வருபவர்களிடம் கூறுவதை சில நேரங்களில் சாந்தினி கேட்டும் கேட்காததுபோல் இருந்துவிடுவாள். என்ன இருந்தாலும் அவன்தானே பாக்கிறான். பிள்ளையை ஏன் மற்றவர்கள் முன்னால் விட்டுக் கொடுப்பான் என எண்ணி மனம் அமைதியடையும்.
மற்றப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எப்போதாவது வந்து போவார்கள். மூத்தவன் வந்து ஒரு அரை மணித்தியாலம் சாந்தினியோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டுப் போனாலும் மருமகள் அந்தி பூத்தாற்போல் வந்து போவதுடன் சரி. இரண்டாவது மகன் கொலண்டில் இருப்பதால் தொலைபேசியில்மட்டும் வாரம் ஒருநாள் கதைப்பதும் ஆண்டில் ஒருதடவை வருவதும் கூட இப்ப அருகிவிட்டது. தூர இருப்பவனைப் பார்க்க மனம் ஆசை கொள்வது இயல்புதான் என்றாலும் அவைக்கும் எத்தனை வேலைகள், பேரப்பிள்ளைகள் படிப்பு என்று இவளால் தன் ஏக்கத்தை ஒருபுறம் தள்ளி வைக்க மட்டுமே முடிந்தது. ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்திருந்தால் இப்பிடி என்னைத் தனிய விட்டிருக்காது " என்று மனம் அங்கலாய்க்கும்.
என்ன எண்ணி என்ன எல்லாம் விதி என்று மனதை ஆற்ற எண்ணினாலும் ஆறாமல் கிடந்தது உழலும் மனதை என்னதான் செய்வது என்று அவளுக்குமே புரியத்தான் இல்லை.
*****************************************************
கீழ் மாடி எண்டால் எப்பிடியும் கோலுக்குள்ளை ஆராவது ஒருத்தர் நடமாடிக்கொண்டு இருப்பினை. இந்த அறைக்குள்ள நாலு சுவரையும், கிடக்கும் ஒரு அலுமாரி ஒருமேசையையும் தவிர என்ன கிடக்குப் பாக்க ? இன்னும் ஒருக்கா மகனைக் கேட்டுப் பாப்பமோ என்று எழுந்த ஆசையை முன்பு கேட்டபோது நடந்தது நினைவில் வந்து அடக்கியது.
"பிள்ளையளின்ரை வசதி முக்கியமோ உவவின்ரை முக்கியமோ. பிள்ளையளை மேல விட்டால் என்ன செய்யிறாங்கள் என்று தெரியாது. இவ்வளவு காலம் அனுபவிச்சது பத்தாதே" என்று மருமகள் சாந்தினியின் காதுபடச் சொன்னது இப்பவும் நெஞ்சை அதிரப் பண்ண எதுவும் தோன்றாமல் அமர்ந்திருந்தாள் சாந்தினி.
இப்பிடி நடமாட முடியாதவர்களுக்காக இங்க எத்தினையோ வயோதிக இல்லங்கள் இருக்குத்தான். ஆனாலும் சொந்தங்கள் பார்ப்பது போல் ஆர் பாக்கப் போயினம். அதோட அங்க நடக்கிற அநியாயங்களை அவள் பலதடவை தொலைக்காட்சியில் பார்த்தும் இருக்கிறாள் தானே. "தம்பி என்னைக் கடைசிவரை அங்க விட்டுடாதை" என்று மகனுக்குச் சொன்னபோது மகனுக்கும் கண்கலங்கிப் போனதை இவளும் கவனிச்சவள்தான். "நான் கொண்டு போய் விடமாட்டன் அம்மா" என்று தாயின் கைகளைப் பிடிச்சுக்கொண்டு சொன்னவன்தான். ஆனாலும் மருமகள் இப்பவெல்லாம் பலதடவை காதுபடவே "என்னாலை உந்தப் பம்பஸ் மாத்திற வேலை எல்லாம் செய்ய ஏலாது. கொண்டே ஹோமிலை விடுங்கோ" எண்டு கத்த "அம்மாக்குக் கேட்கப் போகுது" எண்டு அவன் மனைவியைத் தள்ளிக்கொண்டு வெளியே சென்று வாக்குவாதப் பட்டதும் தான் இவளுக்கு மனதில் அந்த யோசினை வந்தது.
இவள் ஒன்றும் ஒன்றும் தெரியாதவள் இல்லை. ஆங்கில அறிவும் மற்ற அறிவுகளும் உள்ள ஒருத்திதான். ஒரு கடையில் சுப்பவைசராக இருபத்தைந்து ஆண்டுகள் வேலையும் செய்து இப்ப பென்சனும் எடுப்பவள் தான். அப்பிடிப்பட்டவளையே வயது போட்டுது எண்டவுடன இப்பிடி வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறானே மகன். அப்ப படிக்காமல் வேலைவெட்டி செய்யாமல் பிள்ளையளையும் புருசனையும் நம்பி வாழுற பெண்களுக்கு என்ன நிலை என்று மனதில் அவர்கள் பால் சிறிது பச்சாதாபமும் எழுந்தது.
ஆரம்பத்தில் இவளுக்குக் கூட அறையில் டிவி ஒன்றும் இல்லை .கொலண்டிலிருந்து இரண்டாவது மகன் வந்தபோது என்னம்மா வேணும் உங்களுக்கு என்று கேட்க, "ஒரு பழைய டிவி எண்டாலும் ஒண்டு இருந்தால் பொழுது போகும் மகன்" எண்டதில், அவன் புதிதாகவே ஒரு சிறிய டிவி வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனான்.
அது வாங்கினது எவ்வளவு நல்லதாகிவிட்டது இப்பொழுது என்று தனக்குள் தானே மகிழ்ந்தாள் சாந்தினி. அது இல்லாவிட்டால் தானும் இந்த நரகத்தில் சாகும் வரை உழன்று கொண்டே இருந்திருப்பேன் என எண்ணியவள் யாரும் வீட்டில் இல்லை என நிட்சயம் செய்துவிட்டு தொலைபேசியை எடுத்தாள்.
********************************************************************
இன்னும் ஒரு மாதத்தில் அவள் இந்தப் பூமிக்கு வந்து எண்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. மாலையில் மகன் வேலையால் வந்து சாப்பிட்டு முடித்து மேலே இவளிடம் வந்து இவளை சுகம் விசாரித்தபின் இவள் மெதுவாகத் தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள். "தம்பி எனக்கு எல்லாச் சொந்தக்காறறையும் பாக்கவேணும் போல இருக்கு" என்றவுடனேயே உங்களைக் கூட்டிக்கொண்டு "என்னை வீடுவீடாப் போகச் சொல்லுறியளோ" என்று அவன் பாய்ந்தபோது அதை எதிர்பாத்தது இருந்ததால் சாந்தினி அசரவில்லை.
"என்னப்பன் உங்களைப் பெத்து வளத்து ஆளாக்கினதுக்கு நான் கேக்கிற ஒரு உதவியைக் கூடச் செய்ய மாட்டியளோ" என்று குரலைக் கொஞ்சம் உயர்த்தியே இவள் கேட்டாள். நீங்கள் ஒண்டும் என்னை வீடுவீடாக் கொண்டு போக வேண்டாம். எல்லாரையும் ஒரு இடத்துக்குக் கூப்பிடுங்கோ என்று இவள் கூறியதுதான் தாமதம், "உங்களுக்கு என்ன விசரோ அம்மா" என்றான் பிள்ளை சத்தமாக.
"எனக்கு எண்பது வயது வருது. அதுக்கு வரச்சொல்லிக் கூப்பிடு" என்றதும் மகனின் முகத்தில் எள்ளல் தெரிந்தது. "உவவுக்கு பேத்டே கொண்டாடுற ஆசை வந்திட்டுதோ அப்பா. உந்த வயதில நல்ல ஆசைதான் " என்றபடி உள்ளே வந்த மருமகளைச் சட்டை செய்யாது, "ஆசை எண்டே வச்சுக்கொள்ளுங்கோ. நீங்கள் ஒண்டும் பணம் சிலவழிக்கத் தேவை இல்லை. என்ரை தாலிக்கொடி கிடக்கு. அதை வித்துப்போட்டு வீட்டுக்குப் பக்கத்தில கிடக்கிற கோலை புக்பண்ணி எல்லாரையும் அம்மாக்குப் பிறந்த நாள் எண்டு கூப்பிடுங்கோ. சாப்பாடும் ஓடர் செய்யுங்கோ. உங்களுக்கு எந்தச் சிலவும் இராது" என்று சொல்லிவிட்டு நீங்கள் போகலாம் என்பதுபோல் மகனைப் பார்த்தாள் சாந்தினி.
எதோ சொல்ல வாயெடுத்த மனைவியை கண்காட்டி வெளியே கூட்டிச் சென்றான் மகன். "சத்தம் போடாதையப்பா. மனிசி இனி எவ்வளவு நாளைக்கு இருக்கப் போகுதோ. சரி அவவின்ர ஆசையை ஏன் கெடுப்பான்" என்று கூறியது சாந்தினிக்குக் கேட்டதாயினும் அதற்குப் பதிலாக மருமகள் முணுமுணுத்தது விளங்கவே இல்லை.
ஒரு வாரமாக மருமகள் மனதுக்குள் சாந்தினியைத் திட்டித்திட்டி எல்லாரையும் பிறந்த நாள் விருந்துக்கு அழைக்க "அட சாந்தினியின்ர மகனைப் பாரன். தாய்க்கு பிறந்தநாள் செய்கிறான். குடுத்து வச்ச மனிசி" என்று எல்லாரும் தம்முள் கதைத்துக் கொண்டனர் மனிசி கொடுத்தது தாலிக்கொடியை என்று தெரியாமல்.
*******************************************
தாலிக்கொடி காசாகி சாந்தினிக்கு ஒரு நல்ல பட்டுச் சீலையும் வந்துசேர, சாந்தினியின் பிறந்த நாள் அன்று இரு உறவினர்கள் வந்து மருமகளுடன் சேர்ந்து அவளை வெளிக்கிடுத்தி சாந்தினியின் இரட்டை வடச் சங்கிலி, இரண்டு சோடி காப்பும் போட்டு அலங்கரிச்சு, முடிமயிர் வச்சு ஒரு பெரிய கொண்டையும் போட்டு முடிய, சந்தோசப்படுவதர்க்குப் பதிலாக மனம் முழுதும் பாராமாகிச் சுமக்க முடியாத அவஸ்த்தையானது சாந்தினிக்கு.
கொலண்டிலிருந்து வந்திருந்த இரண்டாவது மகனும் நேற்று முதல் குடும்பத்துடன் வந்து இங்குதான் நிக்கிறான். இரண்டு மக்களுமாக சாந்தினியை தூக்கிக் கொண்டு வந்து மகனின் ஜீப்பில் இருத்தி மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். மண்டபத்துள் இவளைக் கூட்டிக்கொண்டு போனதும் எல்லாரும் எழும்பி வெள்ளைக்காரர் செய்வது போல் கைகளைத் தட்டி இவளை வரவேற்க இவளுக்குக் கூச்சமாகப் போய்விட்டது.
நடுவில் போட்டிருந்த பெரிய சிம்மாசனம் போன்ற இருக்கையில் இவளை இருத்த, இவளுக்கு என்னவோ போல் இருந்ததுதான் என்றாலும் மண்டபம் நிறைய உறவினர்கள் நண்பர்களைப் பார்க்க மனதில் இன்பமும் துன்பமும் மாறிமாறி எழுந்தன. மண்டபத்துக்கு வந்திருந்த மூத்த மகன் தனக்குத்தான் முதல் உரிமை அம்மாவில் என்பதுபோல மைக்கை வாங்கி வந்திருந்த எல்லோருக்கும் வருகை தந்தமைக்காக நன்றியும் கூறி வரவேற்க, அம்மாவைப் பற்றி ஆகா ஓகோ என்று மற்ற மகன்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் எல்லோரும் புகழ்ந்து புளுக, ஒரு புன்சிரிப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தினி. அம்மாவுக்காகச் செய்வித்த பெரிய கேக்கைப் பிள்ளைகள் சூழ நின்று அம்மாவைக் கொண்டு வெட்டுவித்து அம்மாவுக்குத் தீத்தி, தாமும் அம்மாவின் கையால் வாங்கி உண்டு.... பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் பாசம்கண்டு மனம்பூரித்து தாம் தம் பெற்றோருக்குச் செய்யவில்லையே என்னும் ஆதங்கத்தையும் இதைவிட தம் பெற்றோருக்குச் சிறப்பாகச் செய்யவேணும் என்னும் நினைப்பையும் கொடுக்க, சாந்தினி மட்டும் மனதுக்குள் பலவித அல்லாடல்களோடு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
பிள்ளைகளைக் குறை சொல்ல முடியாதபடி எல்லாரும் ஓடியோடி அனைவரையும் உபசரிக்க அனைவரும் மகிழ்வாக உண்டும், சிலர் சாந்தினிக்குப் பக்கத்தில் கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டும் ஊர்க்கதை உலகத்துக்கதை எல்லாம் கதைத்து முடிய, சாந்தினியோடு நின்று எல்லாரும் படம் எடுக்க ஆரம்பிக்க, மைக்கை ஒருக்காக் கொண்டா தம்பி என்று அதை வாங்கி எல்லாரும் என்ர பிறந்த நாளுக்கு வந்து என்னை சந்தோசப்படுத்தினதுக்கு மிக்க நன்றி. ஆனால் படம் எடுத்துப்போட்டு உடன எல்லாரும் போயிடாதேங்கோ. எல்லாரும் படம் எடுத்து முடிய நான் உங்களுக்கு ஒண்டு சொல்லப்போறன். அதைக் கேட்டுட்டுப் போங்கோ என்றதும் மண்டபத்தில் சலசலப்பு எழுந்தது.
பிள்ளைகள் மூண்டுபேரும் என்ன அம்மா இது என்று, தம்மைப் பற்றித்தான் தாய் ஏதேனும் உளறி வைக்கப் போகின்றாவோ என்று முகம் முழுதும் பயம்தெரிய வந்து நிக்க, ஒண்டும் இல்லை பயப்பிடாதேங்கோ என்று விட்டு, வாங்கோ படம் எடுக்க என்று நிலைமையை வழமையாக்க, வந்திருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று சாந்தினியுடன் நின்று படம் எடுக்க ஆரம்பித்தனர்.
**********************************************************
அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் படம் எடுத்தபின்னும் போகாது காத்திருக்க, சாந்தினி அருகிலிருந்த மைக்கை நடுங்கும் கைகளால் எடுத்தாள்.
"என்ர பிள்ளையள் மூண்டுபேரும் என்னை முதல்ல மன்னிக்க வேணும். பிள்ளையளுக்கு மட்டும் இதைச் சொல்லியிருந்தால் அவை கடைசிவரை இதுக்குச் சம்மதிச்சிருக்க மாட்டினம். அதாலைதான் எல்லாருக்கும் முன்னால வச்சுச் சொல்லுறன்" என்றதும் பிள்ளைகளிலும் விட மனைவிமாரின் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்க, எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சாந்தினி தொடர்ந்தாள்.
"நான் இந்த உலகத்தில இருக்கப் போறது இன்னும் சில வாரங்கள் தான்" என்று அவள் முடிக்க முன்னர் மண்டபத்தில் பெரும் இரைச்சல் எழுந்தது . "தயவு செய்து எல்லாரும் அமைதியாக் கேளுங்கோ. எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. என்ர பிள்ளையள் என்னை நல்ல வடிவாத்தான் பாக்கினம். ஆனால் நான் நோயாளியாகிப் பிள்ளையளுக்குப் பரமா இருக்க விரும்பேல்லை. அதனால பிள்ளையளைக் கேட்காமலே நான் இறந்து போறதுக்கு முடிவெடுத்திட்டன்" என்றதும் "அம்மா உங்களுக்கு விசரே" என்றபடி நெருங்கி வந்த பிள்ளைகள், தாயின் தீர்க்கமான பார்வையையும், எதுவும் கதைக்க வேண்டாம் என்று தாய் காட்டிய சைகையையும் பார்த்து செய்வதறியாது நிற்க, சாந்தினி தொடர்ந்தாள்.
"நடக்க முடியாமல் இருக்கும் போதே என்னால பிள்ளைகள், மருமக்களுக்குத் துன்பம். ஏதும் நோய் வந்து படுத்த படுக்கையானா .... என்னால நினைச்சுப் பார்க்கவே முடியேல்லை. தற்செயலா ஒருநாள் தொலைக்காட்சி பாக்கேக்கை Euthanasia பற்றி அறிஞ்சனான். அதால சுவிசில இருக்கிற அந்த நிறுவனத்தோட நான் தெளிவாக் கதைச்சிட்டன். என்ர லைப் இன்சூரன்ஸ் இன்னும் சில நாளில முப்பது ஆண்டுகள் முடியப்போகுது. ஒரு குறிப்பிட்ட காசு தருவினம். அந்தக் காசு இந்தச் செலவுகளுக்கும் செத்தவீட்டுச் செலவுக்கும் போதும். அவையே என்னைப் பொறுப்பெடுத்து கூட்டிக்கொண்டு போய் என்ர உடலை இங்கே திருப்பக் கொண்டு வந்தும் தருவினம். எல்லாரும் என்னை மன்னிச்சு சந்தோசமா வழியனுப்பி வைக்கவேணும்" என்றுவிட்டு மைக்கை மேசையில் வைக்க, சின்னச் சத்தம் கூடக் கேட்காமல் மரண அமைதியாகிப் போன மண்டபத்தில் மைக்கின் சத்தத்தம் டொங் என்று பெரிதாய்க் கேட்டது.

No comments:

Post a Comment