Monday 30 October 2023

மனக் குரங்கு


 

 

அம்மன் கோவில் மணி அடிக்கத் தொடங்கீட்டுது. பின்னேரப் பூசை இப்ப. விதவிதமா சீலை உடுத்திக்கொண்டு பெண்கள் போவினம். எனக்கும் கோவிலுக்குப் போக ஆசைதான். ஆனால் உந்த விடுப்புக் கேட்கிற ஆட்களுக்குப் பதில் சொல்ல எரிசல் தான் வரும். ஏதோ உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்தமாதிரி கூடிக் கூடிக் குசுகுசுப்பினம்.  மூன்று பிள்ளைகளுடன் நான் அம்மா வீட்டுக்கு வந்து பதினொரு மாதங்களாகின்றன.

நான்கு அண்ணன்களுடனும் ஒரு அக்காவுடனும் பிறந்த எனக்கு மட்டும் வாழ்வு ஏன் இப்பிடியானது. எல்லோருமே வெளிநாட்டில் இருக்க என் அவசர புக்தியால் வாழ்வு இப்பிடியாகிவிட்டதே. என்ன செய்வது? என் தலையில் இப்படி எழுதியிருக்கு என என்னை நானே தேற்றிக்கொண்டாலும் எதிர்காலம் கேள்விக்குறியோடு பூதமாய் என்னை பயமுறுத்தியபடி இருக்க வேறு வழிகள் எதுவும் தோன்றாமல் அந்த அந்திப் பொழுதின் அழகை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.

முன்பொரு காலத்தில் இந்த இயற்கையை எப்படியெல்லாம் இரசித்திருப்பேன். மறையும் கதிரவனின் அழகை இதேபோன்றோரு மண்  கும்பியின் மேலிருந்து நானும் ரவியும் இரசித்திருக்கிறோம். அதன் பின்னரும் வானில் பறக்கும் வவ்வால்களை எண்ணியபடி, நட்சத்திரக் குவியல்களை இரசித்தபடி ...........ஒரு ஆண்டு எத்தனை மகிழ்வாய்க் கழிந்தது. காதலிக்கும்போது எமக்கு ஏற்றாற்போல் இருக்கும் ஆண்கள் திருமணத்தின் பின்னர் ஏன் முற்றிலுமாய் மாறிப்போகிறார்கள்?

என் கண்களின் வசீகரிப்பில் என்னிடம் வீழந்ததாகச் சொல்லிய ரவி அங்கை ஏன் பார்க்கிறாய்? அவனை ஏன் பார்க்கிறாய்? வாசல்ல ஏன் போய் நிக்கிறாய்? அவனோடை ஏன் பல்லைக் காட்டிக் கதைக்கிறாய் என்று............. அப்பப்பா நினைக்கவே அருவருக்கும்படி என்னைக் கேள்விகளால் துளைத்ததை இப்ப நினைத்தாலும் கோபம் தான் எனக்கு வருது. ரவியின் அக்கா கூட ‘’மதுமிதாவை ஏன் சந்தேகப்படுறாய். உந்தக் குணத்தை மாத்திக்கொள்’’ என்று எத்தனையோ தடவை சொல்லியும் அவர் திருந்திறமாதிரித் தெரியேல்லை. தனியாகக் கடைகளுக்குப் போகக் கூட அனுமதி இல்லை. எப்போதும் அவர் சொல்வதைக் கேட்டு, என்ன சொல்வாரோ என்று பயந்து பயந்து, அவர் விரும்பிறமாதிரி உடை உடுத்தி.......அவர் விரும்பிறதை மட்டும் செய்து ஒரு பவுடர் போட்டாலும் ஆரைப் பார்க்கப் பவுடர் போட்டுக்கொண்டு வெளிக்கிடுறாய் என்று.........ஒரு ஆடையைக் கூட ஆசைப்பட்டுக் கட்ட முடியாமல்......போதும்போதும் என்னுமளவு எல்லாக் கொடுமையும் அனுபவித்தாச்சு.

அதுக்குப் பிறகுதான் இனியும் அவரை சகிச்சுக்கொண்டு சேர்ந்து இருக்கிறது முடியாது என்று தனிய வந்து விவாகரத்துக்குப் போட்டது. சின்னனில இருந்தே உனக்குப் பிடிவாதம் அதிகம். கொஞ்சம் அனுசரிச்சுப் போனால் என்ன என்னும் அம்மாவுக்குப் பதில் சொல்ல எனக்கு முடியேல்லைத்தான். “’எங்களைக் கேட்காமல் உன்ர எண்ணத்துக்கு புருசனை விட்டிட்டு வந்திட்டாய். மூண்டு பிள்ளையளை வச்சுக்கொண்டு என்ன செய்யப்போறாய்” என்று இரு அண்ணன்களும் கேட்டாச்சு. எனக்கு முதல் பிறந்த அண்ணாதான் என்னோடை ஒட்டு. மாதாமாதம் ஒரு ஐம்பதாயிரம் அண்ணிக்குத் தெரியாமல் அனுப்பிக்கொண்டிருக்கிறார். 

அந்த பெண் வக்கீல் கூட”உமக்கு மூன்று பிள்ளைகளையும் வைத்திருக்க முடியுமா என்று கேட்டதுக்கு “என்னால் பிள்ளைகளைத் தனிய வளர்க்க முடியும்” என்று வீம்பாகக் கூறினாலும் அது எத்தனை பெரிய துன்பம் என்று எனக்கு போகப்போகத்தான் விளங்கத் தொடங்கிச்சிது. அதுக்காக திரும்ப ரவியோடை போய் சேர்ந்து வாழவே முடியாது. இன்னும் ஒரு வருடம் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கத்தான் வேணும் விவாகரத்துக் கிடைப்பதற்கு. அதுவரை அண்ணன் இருக்கிறார்தானே என்னைப் பார்த்துக்கொள்ள. நானே என்னைத் தேற்றிக்கொள்கிறேன்.

பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள். அம்மா வெங்காயத்தை உரிச்சு வையுங்கோ என்று சொல்லிவிட்டு நான் கூடையை எடுத்துக்கொண்டு பிரான்சில் இருக்கும் அக்கா எனக்கு அனுப்பிய இரண்டரை இலட்சத்தில் வாங்கிய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சந்தைக்குக் கிளம்புகிறேன். போகும்போது தெரிஞ்ச சிலர் தலையாட்ட சிலர் பார்க்காதவாறு செல்வது மனதுக்குள் கோபத்தை வரவளைத்தாலும் அதை அடக்கியபடி நான் கடந்து செல்கிறேன்.

பக்கத்தில் சில சிறிய கடைகள் இருக்குத்தான். அம்மா கூட “உதில பக்கத்தில வாங்கிறதுக்கு எதுக்கு இப்ப அங்கை போறாய்” என்று என்னை வீட்டில் நிறுத்தி வைக்கப் பார்த்தாலும் நான் கேட்பதில்லை. பல நேரங்களில் பெண்களுக்குப் பெண்களேதான் எதிரிகள். நான் எதுக்கு மற்றவைக்குப் பயந்து வீட்டிலையே கிடக்கவேணும். எந்தக் காலத்தில இருக்கிறா அம்மா என எனக்குள் எண்ணிக் கொள்வேனே தவிர அவவுக்குப் பதில் எதுவும் கூறுவதில்லை. சரியான அமசடக்கி என்று அம்மா முணுமுனுப்பதும் கேட்பதுதான். ஆனாலும் அதற்கும் பதில் சொல்லாது சிரித்துவிட்டு என் அலுவலில் கண்ணாய் இருப்பதை வழமையாக்கிக் கொண்டேன்.

அன்று கொஞ்சம் பிந்திவிட்டது. சில மரக்கறிகள் முடிந்துபோய் இருக்கும். ஆனாலும் சிலது மலிவாயும் கிடைக்கும். நான் வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாய் முறித்துப் பார்த்துத் தட்டில் போட்டுவிட்டு நிமிர்ந்தால் என்னருகில் ஒருவர் என்னையே பார்த்துக்கொண்டு நிற்க எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை என்று புரிந்துகொண்டு “நான் தயாளன். சிதம்பரியின் மகன். கனடாவில இருக்கிறன்” என்று தானாகவே அறிமுகம் செய்கிறார். எனக்கோ பார்த்த முகமாய்ததான் இருந்தாலும் நினைவு வரவில்லை. அதை அவரிடமே சொல்கிறேன்.

“நீங்கள் முந்தியும் எங்களைக் கணக்கில எடுக்கிறேல்லை. அப்ப எப்படித் தெரியும்” என்கிறார். “இதென்ன தேவையற்ற குற்றச்சாட்டு” என்றபடி வெண்டைக்காய்க்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவருடன் கூடவே  நடக்கிறேன். “நீங்கள் பள்ளிக்கூடம் போகேக்குள்ள நான் எத்தினை நாள் உங்களுக்குப் பின்னால திரிஞ்சனான்” என்று ஒருவித மனத்தாக்கலுடன் சொல்ல எனக்கு நினைவு வருகிறது. யாரை மறந்தாலும் எமக்குப் பின்னால் திரிஞ்சவர்களை மறக்காதுதானே.

லேடீஸ் கொலிச்சில் படித்த எனக்கு அப்போதெல்லாம் எம்மூரவர்கள் பெரிதாய்க் கண்ணுக்குத் தெரிவதில்லை.

நீங்கள் எங்க படிச்சனீங்கள்?

அவர் சொன்ன பள்ளிக்கூடம் எம்மூரில் தான் இருந்தது. அதனால் நான் அவரை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லைத்தானே என மனம் சமாதானம் சொல்ல “கனடாவில் இருந்து எப்ப வந்தீர்கள்? எத்தனை குழந்தைகள்” என்று கதையைத் திசை திருப்புகிறேன்.

 

“எனக்கு சந்திராவைப் பேசித்தான் செய்தது. நான் முதல்முதல் அவவைப் பார்க்கப் போகேக்குள்ள அவ சாதாரணமாத்தான் இருந்தவ. இரண்டு ஆண்டுகள் தான் சந்தோஷமான வாழ்க்கை. கொஞ்சநாள் போகத்தான் தன்பாட்டில கதைக்கிறதும் வெறிக்கவெறிக்கப் பாக்கிறதும் ஏதோ தன்னுக்குள்ள பேசுறதும்...........நானும் குணமாகிவிடும் எண்டுதான் பொறுத்துக்கொண்டு இருந்தன். சமையல் சாப்பாடெல்லாம் மாமிதான். இந்தியாவுக்குக் கொண்டு போய்கூட வைத்தியம் பார்த்தும் சரிவரேல்லை. கடைசியில நோய் முத்திப்போய் உடுப்புகளை கழட்டி எறிஞ்சிட்டு  அம்மணமா நிக்கத் தொடங்க, மாமா மாமிதான் நீங்கள் இவ்வளவு காலம் துன்பப்பட்டது போதும் எண்டு சொல்லி விவாகரத்தும் எடுத்துத் தந்தவை. பாவம் நல்ல ஜீவன்கள். அதுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் ஓடிப் போச்சு. நானும் இப்பிடியே இருந்திட்டன். அப்பப்ப அம்மாவைப் பார்க்க இங்க வருவன்” என்று தயாளன் சொல்ல எனக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருக்கிறதோட மட்டுமில்லாமல் நெஞ்சுக்கையும் ஏதோ செய்ய எப்பிடி ஆறுதல் சொல்லுறது எண்டு தெரியாமல் அவர் சொல்லுறதைக் கேட்டுக்கொண்டிருக்கிறன்.

அதன்பின் நாங்கள் இருவரும் அடிக்கடி பொது இடங்களில் சந்திக்கவும் மணிக்கணக்கில் கதைக்கவும் தொடங்கி அவர் கனடா போனபின்னும் தொடர்ந்து போனில வற்சப்பில எண்டு ஒருநாள் விடாமல் விவாகரத்து கிடைக்கும் வரைக்கும் கதைத்துக்கொண்டே இருந்தம். அதுக்குப் பிறகுதான் என்  வாழ்க்கையில் மீண்டும் வசந்தகாலம் ஆரம்பிச்சது. 

 

   *******************************************************************************************************

பார்க்கும் இடமெங்கும் வெள்ளைவெளேர் என்று பூம்பனி நிறைந்திருக்கு. சொல்வதற்கும் பார்ப்பதற்கும்தான் பூம்பனி அழகானது. ஆனால் கொடும்பனி என்றுதான் நான் சொல்வேன். பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பனித்துகள்கள் தாங்க முடியாத குளிரை ஏற்படுத்துகின்றன. பனி இறுகி எத்தனை விபத்துக்களை உண்டுபண்ணுகின்றன. என்னதான் குளிர் ஆடைகளை அணிந்து வெளியே சென்றாலும் கிடுக்கிடுத்து நடுங்க வைக்கின்றன. சில மனிதர்களும் இப்படித்தான். பார்க்க மிகவும் நல்லவர் போலத் தான் தெரிவார்கள். அவர்களோடு நெருங்கிப் பழகிய பின்னர்தான் அவர்களின் உண்மை மனநிலைகளை அறிந்துகொள்ள முடிகிறது. சாளரத்தினூடாக வெளியே பார்த்துக்கொண்டு நின்ற என்னால் பனிப்பொழி  வின் அழகை தொடர்ந்தும் இரசிக்க முடியவில்லை.

 நான் கனடா வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. எவ்வளவு விரைவாக ஓடிப்போகுது காலம். இப்பதான் என்னால என் பிள்ளைகளில் இருவரை கனடாவுக்கு எடுக்க முடிந்தது. மூத்தவனுக்கு பதினாறு வயதானபடியால் அவனை மட்டும் எடுக்க முடியவில்லை. அவன் இப்ப ரவியுடன்தான் இருக்கிறான். என்னதான் இருந்தாலும் பிள்ளைகளை விட்டுவிட்டு கனடா வரமுடியாதுதானே. அம்மாவும் எத்தனை நாள்தான் பிள்ளைகளைத் தனியாக வளர்க்க முடியும். நான் ரவியின் தமக்கையுடன் கதைத்ததும் எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது. அவவே தான் பிள்ளைகளை நான் பார்த்துக்கொள்ளுறன், நீர் போம் என்று சொன்னதால்தானே நான் நின்மதியாய் இங்கு வரவும் இருக்கவும் முடிந்தது. வருவதற்கு முன்னர் விவாகரத்தும் கிடைத்ததுதான் என் அதிட்டம்.

எப்படியும் ஒரு ஆறு மாதங்களுள் மூத்தவனையும் கூப்பிட்டிடுவன். அதுவரை பொறுமையாய்த்தான் இருக்க வேணும். ரவிகூட இப்ப எவ்வளவு மாறிவிட்டார். முன்னர் என்னை எப்படி எல்லாம் சந்தேகப்பட்டார். இப்ப அதை உணர்ந்து அதுக்கெல்லாம் எத்தனைதரம் மன்னிப்புக் கேட்டிட்டார். மன்னிக்கிறதுதானே மனித மாண்பு. அதை விளங்கிக் கொள்ளாமல் “எதுக்கு ரவியோடை அடிக்கடி கதைக்கிறாய்” என்று ஏசும் தயாளனுக்கு எப்பிடி விளங்கப்படுத்திறது என்றே தெரியாமலிருக்கு. ஐந்து ஆண்டுகள் கணவனாய் வாழ்ந்தவர் என்று ஏன் தயாளனுக்குப்  புரியுதில்லை. வெளிநாடுகளில் பிரிந்த கணவனும் மனைவியும் சுமுகமாகப்பேசிக் கொள்வது இயல்புதானே என்று அவருக்குச் சொன்னாலும் நாங்கள் வெள்ளைக்காரர் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

எப்படியோ மன நின்மதியான இந்த வாழ்வு தயாளனால்தான் என நன்றியோடு எண்ணிப்பார் என உள்மனம் அடிக்கடி சொல்லும்போதெல்லாம் எனக்கு ஏற்படும் ஆயாசத்துக்கு அளவே இல்லை.

 

 

நான் கனடா வந்தபின் வேலைக்குப் போகும்படி தயாளன் என்னை வற்புறுத்தவில்லை. என்றாலும் அவர் வேலைக்குப் போனபிறகு வீட்டில் எட்டு ஒன்பது மணிநேரம் தனிய இருக்கவும் பிடிக்கவில்லை. தயாளனின் முதல் மனைவி இருந்த நிலையால் யாரும் அவர் வீட்டுக்கு வருவதில்லை என்று சொல்வதைவிட இவர்களே யாரும் தப்பித்தவறிக்கூட வீட்டுக்கு வாராதவாறு பார்த்துக்கொண்டனராம் என்று வேதனையுடன் தயாளன் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியே ஒருவித மன அழுத்தத்துள்ளும் தயாளனும் இருந்தபடியால் யாரையும் நண்பர்கள் என்று வீட்டுக்கும் அழைத்ததில்லை. அது இப்போதும் தொடர்கிறது.

இப்ப இருப்பது ஒரு படுக்கை அறை,ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை மட்டும்தான். எங்கள் இருவருக்கும் அது போதும்தான் என்றாலும் பிள்ளைகளைக் கூப்பிட்டால் இது போதாதுதானே என நான் மட்டுமல்ல தயாளனும் யோசித்து என் பிள்ளைகளைத் தன் பிள்ளைக்களாய் எண்ணித்தான் இந்த பெரிய வீட்டை வாங்கினவர். தயாளன் தொடர்ந்து வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார். அவருக்கு நல்ல சம்பளம். என்  உடல்வாகிற்கும் முகப் பொலிவுக்கும் நகை நட்டுகள் போடாமலே அழகாய் இருப்பதால் தங்கநகைகள் கூட நான் அதிகம் வாங்கிப் போடுவதில்லை.

தயாளன் தொடர்ந்து வேலை செய்ததாலும் அவரின் முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை என்பதாலும் அவரிடம் சேமிப்பில் ஏற்கனவே இருந்த பணத்தைப் போட்டு இந்த வீடு வாங்கியது எத்தனை வசதியாக இருக்கு எங்களுக்கு .

பெரியவனுக்கும் ஸ்பொன்சர் சரிவந்திடும் என்றுதான் நம்பிக்கையாய்ச் சொல்கிறார். நான் வேலை செய்யும் பணத்தைக் கூட அவர் கேட்பதில்லை. தன் வருமானத்திலேயேதான் என் இரு பிள்ளைகளையும் கூப்பிட்டவர். இவர் என்னைக் கலியாணம் கட்டினது என் அதிட்டம்தான். இருந்தாலும் என் அழகும் ஒரு காரணம் தானே என எண்ணியதில் ஏற்பட்ட பெருமிதத்தில் கண்ணாடியின் முன் சென்று என்னை நானே பார்க்கிறேன். என்னை அறியாது என் அழகில் நானே இலயித்து நிற்கிறேன்.  

நாற்பது வயதானாலும் என் அழகு கூடியிருக்கிறதேயன்றிக் குறையவில்லை. மாருதியின் ஓவியப் பெண்ணின் உடல்வாகும் நெற்றியும் அதற்கும் மேலே தனித்துவமான உதடுகளும் புருவமும் வெள்ளை வெளேர் அல்லாமல் பளிங்குபோன்ற அந்த நிறமும் என்னை நானே பார்த்துப் பொறாமை கொள்ளவைப்பதாய் இருக்க என்னுள் சிரித்துக் கொள்கிறேன். 

திருமண வீடுகளுக்குப் போவதென்றாலோ அல்லது வேறு பொது நிகழ்வுகள் என்றாலோ எனக்குப் போவதற்கு ஒருமாதிரி இருக்கும். பெண்கள் பலரும் ஏதோ செய்யாத குற்றத்தைச் செய்ததுபோன்று என்னோடு பேசாமல் இருக்க பத்திக்கொண்டு வரும். தயாளனிடம் குறைப்பட்டுக்கொண்டபோது “அவர்களுக்கு உன் அழகின் மேல் பொறாமை. அதை இப்பிடித்தான் காட்டுவார்கள்” என்றதில் என மனமும் அமைதியானது. அதுமட்டுமன்றி பெண்கள் தான் கதைப்பதில்லையே தவிர ஆண்கள் பலரும் வைத்தகண் வாங்காமல் என்னைப் பார்ப்பதை நான் கண்டுவிட்டுத் தெரியாதமாதிரி இருப்பன்.

நான் தயாளனைக் கட்டிக்கொண்டு வந்தபிறகு என் அண்ணன்மாரும் பிரச்சனை தீர்ந்ததாக எண்ணி என்னோட கதைக்கிறதை விட்டுவிட்டார்கள். எனக்கது கவலைதான் என்றாலும் அவை ஒருத்தரும் கனடாவில் இல்லை என்றதில் சிறிது நின்மதியாகவும் இருக்கு.

 

என்ர மூத்தவனும் இப்ப கனடா வந்திட்டான். என் மனம் இப்ப எத்தனை நிம்மதியாய் இருக்கு என்று சொன்னால் உங்களுக்கு விளங்காது. பிள்ளைகள் மூவரையும்  கொலிச்சுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய்வரவே நேரம் சரியாக இருக்கு. பெரியவனுக்கு இப்ப பதினேழு வயது. கொஞ்சம் வளர்ந்தபடியாலும் தகப்பனோட இருந்ததாலும் தயாளனோடை சேருகிறானே இல்லை. இப்ப எனக்கு அதுதான் பெரிய தலையிடியாக் கிடக்கு. ரவி என்னத்தைச் சொல்லி அவன் மனதைக் கலைத்துவிட்டிருக்கிறாரோ தெரியேல்லை. வேற வீட்டை போவமென்று ஒரே கரைச்சல். சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுக்குப் போனால் எவ்வளவு செலவு என்று அவனுக்கு எவ்வளவு சொல்லியும் விளங்கிக் கொள்கிறான் இல்லை.

தயாளன் எவ்வளவு காசைச் செலவழிச்சு அவனைக் கூப்பிட்டவர். என்  பிள்ளைகளில அவருக்கு அத்தனை அன்பு. அவர் கதைக்கப் போனாக்கூட அவரை அலட்சியம் செய்திட்டு போயிடுறான். இப்ப நினைச்சால் அவனைக் கூப்பிடாமலே விட்டிருக்கலாம் போல கிடக்கு. ஆனாலும் அவனை மட்டும் அங்கை விட்டிட்டு நான்மட்டும் எப்பிடி நிம்மதியாய் இங்க இருக்கமுடியும்? “சொறி தயாளன்” எண்டு நான் சொன்னதுக்கு அவன் சின்னப்பிள்ளை. அதை நான் பெரிசா எடுக்கேல்லை. நீர் கவலைப்படாதையும். போகப் போக மாறிடுவான் எண்டு எனக்கு ஆறுதல் சொல்லுறார்.

இப்ப சில மாதங்களாகப் பெரியவன் ஒழுங்காப் படிக்கிறான் இல்லை. எனக்கு அவனோடை பெரிய தலையிடியாய் இருக்கு. கொலிச்சுக்கும் போகாமல் இடையிடையே கட் அடிச்சுக்கொண்டு பெடியளோடை திரியிறான் எண்டு கேள்விப்பட்ட நேரம் தொட்டு மனமெல்லாம் ஒரே சஞ்சலாமாய்க் கிடக்கு. ஊரிலை எண்டாலும் கொஞ்சம் அடக்கி வைக்கலாம். இங்க ஒண்டும் செய்ய ஏலாமல் இருக்கு. இவனை என்ன செய்யிறது எண்டுதான் எனக்கு விளங்குதே இல்லை.    

நீர் முன்னை மாதிரி இல்லை. என்னோட கதைக்கவே உமக்கு நேரம் இருக்கிறேல்லை என்ற தயாளனின் குற்றச்சாட்டுக்கும் என்ன சொல்லி அவரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் எனக்கு தலையெல்லாம் வலிக்க நான் மனச் சோர்வுடன் யோசிக்க யோசிக்க எனக்கு விடை எதுவுமே கிடைக்குதில்லை. .

நண்பிகள் என்று கூட எனக்கு ஒருத்தரும் இல்லாதது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் இந்த நேரத்தில் என் உள்ளக் கிடக்கையைச் சொல்லி ஆற முடியாமலும் இருக்கு. அக்காவிடம்தான் ஒருக்காக் கதைக்கவேணும். அவ சிலநேரம் நல்ல ஆலோசனை சொல்லுவா என எண்ணியபடி அவவுக்கு போன் செய்கிறேன்.

“உனக்கு நல்ல வாழ்க்கை ஒன்று கிடைச்சிருக்கு. தயாளன் உன்னை கனடாவுக்குக் கூப்பிடாட்டில் உன்ர நிலமை பிள்ளைகளின் நிலமை என்ன எண்டு யோசிச்சனியா? எத்தனை நாளைக்கு உனக்கு நாங்கள் காசு அனுப்பிக்கொண்டு இருக்கிறது. நாங்களும் எல்லாம் குடும்பக்காரர். கஷ்டப்பட்டுத்தானே வெளிநாடுகளில உழைக்கிறம். கடவுள் தந்த அதிட்டத்தை காப்பாற்றிக்கொள்ளப் பார். திரும்பவும் பாழும் கிணத்துக்குள்ள விளப்போறன் எண்டால் கடவுளாலகூட உன்னைக் காப்பாத்த ஏலாது”.  

அக்கா சொல்வது அத்தனையும் சரிதான். ஆனாலும் இவ்வளவு கடுமையா அவ கதைச்சிருக்கத் தேவையில்லை. அக்கா எனக்கு ஆதரவா இருப்பா என்று பார்த்தால் இப்பிடி முகத்தில அடிச்சமாதிரிச் சொல்லி இருக்கத் தேவையில்லை. ரவியோடை கதைக்கிறனான் எண்டு சொன்ன உடனையே அக்காக்கு சரியான கோபம் வந்திட்டிது.

அவரும் பாவம்தானே. என்னில அவருக்கு இன்னும் அன்பு நிறைய இருக்கு. எதை மறந்தாலும் முதல் காதல், முதல் கலியாணம் ஆருக்கும் மறக்குமே. கடவுளே ஏன் என்னை இப்பிடிச் சோதிக்கிறாய். என்னை இப்பிடி திக்குமுக்காட வச்சிட்டியே கடவுளே. என்ன முடிவை எடுக்கிறது எண்டு எனக்குத் தெரியேல்லையே. மூத்தவனோட திருப்ப ஒருக்காக் கதைச்சுப் பார்ப்பம் என்று எண்ணியதும் சிறிது நிம்மதி வருது எனக்கு.

 

 

இப்ப கொஞ்ச நாளா வானமெங்கும் ஒரே மேகமூட்டம். திட்டுத்திட்டாய் கருமேகங்கள் சூழ்வதும் குளிர் காற்று அடிப்பதும் இத்தனை ஆண்டுகளாய் இல்லாமல் இதுதான் முதல் முறை. எத்தனையோ தடவைகள் குளிர் காலங்களில் புயல்க்காத்து வீசியிருக்குத்தான். இப்போது புதிதாய் இடிமுழக்கமும் மின்னலும் சேர்ந்து பயம் கொள்ள வைக்குது. முன்புபோல் தயாளனுடன் கதைக்கவும் முடியுதில்லை. அவர் பட்டும்படாமலும் என்னோடு வாழ்வதுபோல் எனக்குத் தோன்றுவது எனது கற்பனையா என்றுகூட என்னால் உறுதியாகக் கூற முடியுதில்லை. எல்லாம் இன்னும் ஒரு வாரம்தான். அதுக்குப் பிறகு என் முடிவை நான் தயாளனுக்குச் சொல்லத்தான் போறன். தேவையான தருணத்தில சரியான முடிவை எடுத்திடவேணும். மனச்சாட்சிக்குப் பயந்து செய்யிறதா வேண்டாமா எண்டு யோசிச்சு யோசிச்சு தலையிடிதான் மிச்சம். என்ன செய்யப் போறன் நான்.

 

*********************************************************************************************************************************************************

 

தயாளன் இரண்டு நாட்களாக பிந்தி வீட்டுக்கு வாறதுமில்லாமல் என்னோட பெரிதா முகம் குடுத்துக் கதைக்கிறார் இல்லை. இண்டைக்கு அவர் வேலையால வந்த உடன ஒருக்காக கதைச்சுப்போடவேணும். கொஞ்ச நாட்களா நானும் அவரைக் கவனியாமல் விட்டிட்டன். பாவம் அவர் எனக்காக எத்தனையைச் செய்திருக்கிறார். அவரை நான் ரவியைச் சந்திக்கிறதுக்கு முன்பே கண்டிருந்தால் என் வாழ்வு வேறு விதமாகப் போயிருக்கும். சரி இப்ப அதை நினைச்சு என்ன பயன். என் விதி இதுதான் என்று இருந்திருக்கு. சரி பிள்ளைகளை எடுக்கிற நேரமாப் போச்சு. ஆனால் என்றுமில்லாமல் மனம் ஏதோ சஞ்சலப்படுறமாதிரி ஏன் இருக்கு என்று விளங்குதில்லை. சுவாமி அறைக்குச் சென்று கண்மூடி நின்றுவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு கொலிச்சுக்குப் போகக் காரை எடுக்கிறேன்.

என்ன இன்னும் தயாளன் வரேல்லை. நானும் நேரத்தைக் கவனிக்கேல்லை. இப்ப ஒரு கிழமையா பிந்தித்தான் வாறார். ஆனாலும் இண்டைக்கு இரவு பதினொன்று ஆகப்போகுது. இவ்வளவுநேரம் என்ன செய்யிறார். போனைக் கூட நிப்பாட்டி வச்சிருக்கிறாரே. எதுக்கும் காலைவரை பார்ப்பம். எனக்கும் களைப்பா இருக்கு. எதுக்கும் போய் படுப்பம்.

நான் படுக்கையறைக்கு வந்து போர்வையை எடுக்க அவர் படுக்கிற பக்கம் என்வலப் ஒண்டு தெரியிது. என்ன அது என்று பார்க்க ஆவலாய் இருக்க போய் எடுக்கிறன். மதுமிதா என்று என் பெயர் இருக்க எனக்கு மனதில் ஏதோ செய்ய அதை உடைக்கிறேன்.

“எனக்கு வாற கோபத்துக்கு உம்மை கொலை செய்திட்டு ஜெயிலுக்குப் போகலாம் போல இருந்ததுதான். ஆனால் என் நல்ல காலம் நானே என்  கோபத்தை அடக்கீட்டன். அதுக்குக் காரணம் உமது தவறுக்கு உமது பிள்ளைகளைத் தண்டிக்கக் கூடாது என்பதுதான்”

ஐயோ ஏன் தயாளன் இப்பிடி எழுதியிருக்கிறார்.. நெஞ்சு பதற நான் கட்டிலில் அமர்ந்து மிகுதியை வாசிக்கிறன்.

“நான் ஐந்து ஆண்டுகளாகப் பட்ட துன்பத்திற்கு கடவுள் எனக்குத் தந்த சிறந்த பரிசாத்தான் நான் உம்மை எண்ணினன். என் அடிமனதில உம்மேல் இருந்த காதலும் ஆசையும் நீர் கணவனை விட்டுப் பிரிந்து இருக்கிறீர் எண்டதும் மீண்டும் உயிர்த்திது. அதனால உமது பிள்ளைகளையும் என்  பிள்ளைக்களாய் எண்ணித்தான் இந்த ஐந்து ஆண்டுகளும் வாழ்ந்தனான். ஆனால் நீர் எனக்கு செய்ய நினைத்தது பெரிய துரோகம். அதைக்கூட மன்னிக்கலாம் நீர் என்னோட பேசி ஒரு தீர்மானம் எடுத்திருந்தால். ஆனால் நான் ஒருநாள் வெள்ளன வீட்டுக்கு வந்ததால உம்முடைய  சுயரூபம் தெரிஞ்சது. நான் வந்தது தெரியாமல் நீர் உம்மட முதல் கணவனோடை போனிலை கதைச்சதைக் கேட்க நேர்ந்தது என் அதிட்டம்.

நீர் உமது கணவனை ஏஜெண்ட் மூலம் கூப்பிட ஒழுங்கு செய்த விடயம் பற்றி அவனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தீர். முக்கியமாய் ஒண்டு சொன்னீர் பாரும். அதைக் கேட்டு என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்திது. அவன் வந்த உடன அவனையும் இந்த வீட்டில கூட்டிக்கொண்டு வந்து வச்சிருக்கிறது எண்டதைக்கூட மன்னிக்கலாம். ஆனால் அவன் வந்ததும் கோபத்தில நானே வீட்டை விட்டுப் போயிடுவன் எண்டும் இல்லாட்டில் என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லி நீயே சொல்லுவாய் எண்டும் உன்ர முன்னாள் புரிசனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாய். நானாகப் போகாட்டில் என்னைக் கொடுமைப் படுத்திறார் என்று சொன்னால் அவங்களே என்னை வெளியேறச் சொல்வார்கள் என்று சொல்ல உன்ர புருஷன் ஒரு சிரிப்புச் சிரிச்சான் பார். அப்பதான் உனக்கு எந்த விதத்திலையாவது தண்டனை குடுக்கவேணும் என்று நான் தீர்மானிச்சது.

நீயும் பிள்ளைகளும் என்னை வா என்று சும்மாதன்னும் கேட்காமல் இரண்டு நாட்கள் எங்கேயோ போனீர்கள் எல்லோ. அன்றுதான் நான் இந்த வீட்டைப் பார்க்க ஆட்களை ஒழுங்கு செய்தது. வீடு என் பேரில இருந்தாலும் உனக்குப் பாதிப் பங்கு இருக்கு. அதனால தயாளன் என்னை எழும்பச் சொல்லேலாது என்று தினாவெட்டா அவனுக்கு நீ சொல்லிக்கொண்டிருந்தது இப்பவும் என் காதில கேட்டுக்கொண்டே இருக்கடி.

என் வீட்டை நான் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டேன். ஒரு வாரம் மட்டும்தான் நீங்கள் இங்க இருக்கலாம். அதுக்குப்பிறகு உரியவை வந்திடுவினம். உன்ர கையெழுத்து இல்லாமல் எப்பிடி விக்கலாம் எண்டு நீ யோசிக்கலாம். இரண்டு வாரத்துக்கு முந்தி வீட்டுக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறன் என்று சொல்லி உன்னட்டை சில பேப்பரில கைஒப்பம் வாங்கினது நினைவிருக்கா?? என்னை இளிச்சவாயன் எண்டு எண்ணினதால நீ ஒண்டையும் வடிவாப் பாக்கேல்லை. இதுக்குப் பிறகும் நீ வழக்கு வைக்கலாம். வாதாடலாம். ஆனால் அதையெல்லாம் பார்க்க நான் இந்த நாட்டிலையே இருக்கமாட்டான். உன்ர புருஷன் இந்த நாட்டுக்குள்ள எப்பிடி வாறான் எண்டு நானும் பார்க்கிறன். எவ்வளவு நல்லவனாய் இருந்த என்னை இப்படி மாற்றினது உன்ர துரோகம் தான். அதை நான் என் உயிருள்ளவரை மறக்கவே மாட்டன்”

பெயரே போடாமல் தட்டச்சுச் செய்யப்பட்ட கடிதம் என் கையை விட்டு தானாக கீழே விழுது. பனிப்பாறை ஒன்று என் தலைமேல் விழுந்ததுபோல் அதிர்ச்சியில் கண்களில் கண்ணீர் கட்டுமீறி வர நான் அழுத ஓலம் கேட்டு பிள்ளைகள் பதைப்புடன் எழுந்தோடி வந்து என்னம்மா நடந்தது என்று அருகில் வந்து கேட்க, எதுவும் சொல்லாமல் அழுதுகொண்டு இருக்கிறேன் நான்.           

 

  நிறைவுற்றது 

02.10,23


No comments:

Post a Comment