Wednesday 4 March 2015

கடதாசிக் குருவிகள் - கவிதை



கடதாசிக் குருவிகள்
கரைந்து ஓடும் காலங்களின்
கரை சேரா நாட்களுடன்
கனவுகளைச் சுமந்து
கால்கடுக்க நடக்கின்றனர்
கண்களை மூடியபடியே
காரணம் அற்றவர்கள்


காற்றும் சென்றிடமுடியா
கனதியான வெளிகளினூடே
கர்ப்பம் சுமக்க முடியாதவராய்
கருகிப் போனவர் முன்னே
கபடு நிறைந்த முகங்களுடன்
கல்லறை தேடுகின்றனர்

கிரகிக்க முடியாத கணக்குகளை
கிஞ்சித்தும் காணமுடியாது
கிளர்ந்தெழும் கீற்றுக்களாய்
கீழ்ப்படிய மறுப்போர்க்கான
கடைநிலைக் கருவறுப்பாய்
காகங்களின் கரைதல்கள்

கோரமுகங்கள் உருமாற
கொடுவினையின் உருவங்களாய்
கொள்கைகள் அற்றவராய்
கூற்றுக்கள் குதிர்களாக
கும்மாளத்துடன் அலைகின்றன
காற்றின் கடும் வீச்சில்
கலைந்தே குலைந்துபோகும்
கனமற்ற கடதாசிக் குருவிகள்

நிவேதா உதயன்
04.03. 2015

No comments:

Post a Comment