Wednesday 29 July 2020

எனது நேர்காணல்


https://akkinikkunchu.com/?p=121613 


கேள்வி(1): எழுத்துத்துறைக்கு நீங்களா விரும்பி வந்தீர்களா அல்லது எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு வந்தீர்களா?
 நானாக விரும்பி இந்த எழுத்துத் துறைக்கு வந்தது கிடையாது. யாழ் இணையத்தின் வாசகியாகச் சென்ற எனக்கு அங்கு எழுதியவர்களின் எழுத்துக்களும், யாழ் இணையத்தின் மிகச் சிறந்த பகுதியான கருத்துக்களமுமே  என்னை எழுதத் தூண்டியது எனலாம்.
கேள்வி (2): நீங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் எதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள்.இவைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் எவைகளில் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள்?
நான் மேற்கூறிய மூன்றில் சிறுகதையில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறேன். ஏனெனில் அதுதான் எழுதுவதற்கு இலகுவானது.
கேள்வி (3):  நீங்கள் கவிதை எழுதுபராகவிருந்தால் எத்தகு கவிதைகளில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டி எழுதி வருகிறீர்கள்?.
நான் 140 கவிதைகளை இதுவரை யாழ் இணையத்திழும் முகநூலிலும் எழுதி 80 கவிதைகளை நூல்வடிவமும் ஆக்கியுள்ளேன். அவற்றுள் பல என் மனவோட்டதத்தின் பிரதிபலிப்பாய் எழுந்த கவிதைகள். சமூகத்தின்பாலும் தனிமனித உறவுகளின்மேலும் எழுந்த கோபங்கள் கவிதையூடே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கேள்வி (4):எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி எதுவென நினைக்கிறீர்கள்.
துணிவு தான் ஒரு எழுத்தாளருக்கு இருக்கவேண்டிய முதற் தகுதி என நான் எண்ணுகிறேன். ஏனெனில் எத்தனைதான் எழுத்தாற்றல் பெற்றவராக இருந்தாலும் பொதுவெளியில் ஒருவருடைய படைப்பு வெளிவரும்போது, அதற்குப்பின்னர் வாசகர்களின் நேர், எதிர்மறைக் கருத்துக்களை உள்வாங்கவும் எதிர்கொள்ளவுமான துணிவு கொண்டவர்கள் மட்டுமே தொடர்ந்தும் எழுதமுடியும்.
கேள்வி (5): கட்டுரை தவிர்ந்து சிறுகதை, நாவல் என இவையிரண்டும் யதார்த்தக் கதை, கற்பனைக் கதை  ஆகிய இரண்டிணையும் நீங்கள் எழுதுபவராயின் யதார்த்தக் கதைகளில் கற்பனைச் சாயம் பூசப்படுவதில்லையா?.
யதார்த்தக் கதைகளில் பெரும்பாலும் கதை ஆரம்பிக்கும்போது சிலர் தேவையற்ற ஆலாபனைகளைச் சேர்ப்பதுண்டு. அது எழுதுபவரையும் வாசகரையும் சார்ந்தது. சில வேளைகளில் அக்கதையை மற்றவர்கள் ஆவலுடன் வாசிக்கச் செய்யும் நோக்கிலும் கதையை இலகுவாக நகர்த்துவதற்கும் சில சாயம் பூசுதல்கள் இருப்பதுதான். அதைத் தவறு என்று கூற முடியாது என்பதே என் கருத்து. ஆனாலும் என் கதைகளில் கற்பனைச் சாயம் பூசவேண்டிய தேவை ஏற்பட்டத்தில்லை. 
-புனைகதைகள் என்பன உண்மைச் சம்பவங்களை அடியொற்றித்தான் எழுதப்படுகின்றன என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
எல்லாப் புனைகதைகளும் உண்மைச் சம்பவங்களை அடியொற்றித்தான் எழுதப்படுகின்றன என்று கூற முடியாது. சிலரின் கற்பனை வளத்தினால் சிறந்த ஒரு கதையை, இதுவரை கேள்விப்படாத, நடக்காத ஒன்றைக் கதையாக்க முடியும். 
கேள்வி (6): நீண்ட காலமாக எழுத்துலக வெளியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது.அது என்னவெனில,யதார்த்தக் கதைகளில் வரும் கதைமாந்தர்கள் அன்றாடம் உரையாடல்களில் பயன்படுத்தும் சொற்களை அப்படியே எழுதுவதும்,சம்பவங்களை அப்படியே எழுதுவதும் யதார்த்தம் எனச் சொல்லப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
கதைகளில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது ஒருவித உத்தி என்பேன். பல சாதாரண வாசகர்களுக்கு அவைதான் வாசிப்பதற்கு இலகுவாகவும் சலிப்பற்றதாகவுமிருக்கும். ஆனால் எல்லாக் கதைகளிலும் அப்படி எழுதுவது சாத்தியமற்றது. அத்துடன் சாதாரனர் அல்லாத மனிதர்களுக்கு தரமான ,பொதுவான எழுத்துநடையில் வாசிப்பதே இன்பமளிக்கும். ஆகவே யதார்த்த எழுத்து ஒருபாலாருக்கும் தரமான எழுத்து இன்னொருபாலாருக்கும் பிடித்துப்போகலாம். அது வாசிப்பவருடைய மனநிலையிலும் எழுதுபவரின் எழுத்திலுமே தங்கியுள்ளது.
கேள்வி (7) உலகதர இலக்கியங்கள் என்று சொல்லப்படுபவையை அரசியல் சாராத இலக்கியங்கள்தான் என உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?.
உலகத் தர இலக்கியங்கள் என்பது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதோ இல்லை. ஒரு சிலரால் அல்லது குழுவினரின் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படுவது. அல்லது மற்றவரையும் நம்பவைக்கப்படுவது. இக்காலத்தில் அனைத்துமே அரசியல்மயப்படுத்தப்பட்டதுதான். ஆகவே என்னால் அரசியல் சார்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
-சமூக மாந்தர்களே எழுத்துக்களில் இடம்பெறுகிறார்கள். இந்தச் சமூக மாந்தர் சமூகத்தோடு தொடர்பு பட்டிருக்கிறார்கள். இந்தச் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?.
உங்கள் வினாவிலேயே நீங்கள் கேட்ட வினாவுக்கான விடையும் அடங்கிவிட்டதே!
கேள்வி 8: பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.
 
பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.
கேள்வி (9): நீங்கள் கவிதை எழுதுபவராயின் முகநூல்களில் வரும் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.
முகநூல் என்பது துணிவுள்ள எவரும் தம் எண்ணக்கருத்தை எழுத முடிந்த ஒரு தளம். பலர் தம் உணர்வுகளை கவிதைகளாக அங்கு வெளிப்படுத்துகின்றனர். அதில் தவறென்ன? சிலர் தம்மாற்றலை முழுவதுமாய் எண்ணத்தில் வடிக்கின்றனர். சிலர் எண்ணங்களை எப்படியோ எழுத்தாய் வடிக்கின்றனர். அவர்களுக்கும் அது ஓர் அங்கீகாரம்தானே. ஒரு பத்திரிகைக்கோ அன்றி  இணையத்துக்கோ அவர்கள் தம் கவிதைகளை அனுப்பி அது கிடப்பில் போடப்படுவதும் நிராகரிப்பதுமாக இல்லாது என்னாலும் முடியும் என்னும் ஒரு ஆத்ம திருப்பதியை ஏற்படுத்தும் தளமாக முகநூல் அவர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் பலரின் சிறந்த கவிதைகளை முகநூலூடாகவே பார்க்க முடிந்திருக்கிறது. நல்ல கவிதைகளை நின்று ரசிக்கலாம். அல்லாதுவிடில் கடந்து செல்லலாம் அவ்வளவே.
கேள்வி (10) ஒரு கருத்தை, கவிதை மூலமோ அல்லது கதை மூலமோ அல்லது சிறுகதை மூலமோ இவற்றில் எதன் மூலம் சுலபமாகச் சொல்ல முடியும் என நினைக்கிறீர்கள்?.
சில சிறந்த கருத்துக்களை கவிதையில் சில வரிகளினூடே கூறிவிட முடியும். அனால் அது வாசிக்கும் அத்தனை பேருக்கும் விளங்குமா என்பதும் கவிதையின் வரிகள் எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கும் என்பதையும் பொறுத்தே அது அமையும். ஆனால் கதையூடாகக் கூறுவது அதைவிட இலகுவானது. கேட்பவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாயும் அந்த நேரத்திலேயே யாராலும் எவராலும் கிரகிக்கக் கூடியதாகவும் உள்ளதால் இலகுவில் பலரையும் சென்றடையக்கூடியதுமாகவும் இருக்கிறது.
கேள்வி (11) இலங்கையில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின், எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி உங்கள் பார்வை?.
அக்காலத்தில் இலங்கையிலும் ஒரு குறிப்பிட்ட வகையான எழுத்துக்களே அதிககாலம் ஆதிக்கம் செலுத்திவந்தது. பின்னர் எஸ் போ அதை மாற்றியமைத்தார். அதன்பின் பல எழுத்தாளர்களும் எழுத்துக்களும் வளர்சியுற்றன. பின்னாளில் போர் காரணமாக உருவாகிய போரிலக்கியங்கள் மிக வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுற்றன. அக்காலத்தில் புறநானூற்றுப் பாடல்களில் கூறப்படத்திலும் பார்க்க அதிகமான இலக்கியங்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களால் உருவானது. இது ஒரு பாரிய வளர்ச்சிதான்.
-புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வளர்ச்சிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றதா?
யாரும் எவற்றையும் எழுதலாம் என்னும் நிலையும், மற்றவரின் குறுக்கீடுகளின்றி நூலாக்கப்படுவதற்கான இலகுத்தன்மை காணப்படுவதும் அதிகரித்த இணையங்களும், இணையப்பத்திரிகைகளும், தாமே தமக்காக உருவாக்கும் தளங்களும் கூட எழுத்துக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. ஆனாலும் இன்னும் சிலர் எப்போதும்போல் தரமான எழுத்துக்கள் மட்டுமே எழுத்துலகில் நிலைக்கவேண்டும் என்னும் குறுகிய நோக்கில் தடைக்கற்களாகவும் உள்ளனர். நாடுப்புறப் பாடல்கள் எப்படி இன்றும் எம் பண்பாட்டு விழுமியங்களை இலகுநடையில் சொல்கின்றனவோ அவ்வாறே அனைத்து புலம்பெயர் எழுத்துக்களும் எழுத்தாளர்களும்கூட வருங்காலத்துக்கு எம் வாழ்வியலை, எம் துன்பங்களை எடுத்துக் கூறும் இலக்கியங்களாக இருக்கப்போகின்றன என்பதை உணர்ந்து, பேதமின்றி அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதும் ஏற்குக்கொள்வதும் புலம்பெயர் எதிர்காலச் சமூகத்துக்கு நாம் செய்யும் மகத்தான உதவியாகவும் எமக்கான ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும் எனலாம்.
கேள்வி (12) நீங்கள் ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கும் போது கதை மாந்தராக உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டு எழுதுவீர்களாயின் கதை மாந்தர்களின் பலதரப்பட்ட உணர்வுகள் உணர்ச்சிகள் போன்றவற்றை உங்களுக்குள் பிரதிபலிக்கச் செய்துதான் எழுதுவீர்களா?
அப்படிச் சிலரோ பலரோ எழுதலாம். ஆனால் நான் என் கதை தவிர்ந்த மற்றைய கதைகளுக்கு கதை மாந்தராக என்னை எண்ணுவதில்லை. அப்படி எண்ணினால் கதை இன்னும் மெருகேறக்கூடும் . ஆனாலும் என்னால் ஒரு கதையை வெளியே இருந்துதான் பார்க்கமுடிகிறது. அது என் பலமா பலவீனமா என்றும் என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை.
கேள்வி (13) உங்களுடைய படைப்புக்கள் பற்றி விமர்சனம் செய்யப்படும் போது அதனை ஏற்றுக் கொள்வீர்களா?
ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் சிறந்த படைப்பாளர்களாகவே இருக்கமுடியாது.
- அல்லது நிராகரிப்பீர்களா?
நிராகரிப்பதற்கான நிலை எனக்கு இன்னும் ஏற்படவில்லை.
- கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் இவைகளில் எவை அதிக விமர்சனத்துக்குள்ளாவதாகக் கருதுகிறீர்கள்?.
சிறுகதை, கவிதை போன்றவை பெரிதாக விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் கட்டுரைகளே அதிகளவில் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. அதற்கான காரணம் பல கட்டுரைகள் பொதுத்தன்மை கொண்டவையாயும் சமூகம் சார்ந்த விடயங்களை அதிகம் உள்ளடக்கியவைகளாகவும் தனிமனித சார்பற்றவையாகவும் இருப்பதனால் துணிவாகப் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்ததாகவே நாவல்கள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. அவைகூட கதை சார்ந்த அளவீடாக இல்லாது தனிமனிதர், சமூகம் போற்றவையே விமர்சிப்புக்குள்ளாகின்றன.    
- படைப்புக்களில் இடம்பெறும் எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட ஒரு கதையை ஆர்வமாக வாசிக்கும் ஒருவரை நிறுத்தி, சலிப்படைய வைப்பவை எழுத்துப் பிழைகள்.
கேள்வி (14) நீங்கள் ஒரு பெண் எழுத்தாளரானால், அரசியல் கட்டுரை எழுதும் ஆண் எழுத்தாளர்களைப் போல நீங்களும் அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்களா?.
அரசியல் வேலைகள் பல செய்திருந்தாலும் அரசியல் கட்டுரை எழுதுமளவு ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. அதனால் எழுதுவது பற்றி எண்ணிப்பார்த்ததும் இல்லை.
 கேள்வி (15) நீங்கள் இதுவரையில் எத்தனை ஆக்கங்களை எழுதியிருக்கிறீர்கள்?.
சிறுகதைகள் எத்தனை?.நாவல்கள் எத்தனை?.கட்டுரைகள் எத்தனை?.கவிதைகள் எத்தனை?.எத்தனை நூல்களை  வெளியிட்டிருக்கிறீர்கள்?.
என் எழுத்து என்று பார்த்தால் முதலாவது கவிதை ஆழிப்பேரலை அழிவு நினைவுகூரப்பட்டபோது எழுதப்பட்டது. இரண்டாவது கவிதை செஞ்சோலைப் படுகொலைக்கானது. அதன் பின் பெரிதாக எதுவும் எழுதவில்லை. ஐபிசி வானொலியில் கதிர்கள் என்னும் நிகழ்ச்சிக்காக ஒரு பத்து நாடகங்களை எழுதித் தொகுத்திருக்கிறேன். பின்னர் யாழ் இணையத்தில் இணைந்தபின்னர்தான் என் எழுத்துக்கள் வேகமெடுத்தது. அங்கு எழுதுபவர்களின் ஊக்கம் தான் என்னை இத்தனை உயர்த்தியது எனலாம். அங்கு நான் எழுதிய தமிழர்களின் தொன்மைபற்றிய சுமேரியர்கள் தான் தமிழர்கள் என்னும் கட்டுரைக்கு ஏற்படட ஆதரவும் ஊக்குவிப்பும் மகத்தானது. என்னால் எழுத முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள்  யாழிணைய வாசகர்களும் எழுதுபவர்களும். அதன்பின்னர் என் சொந்த அனுபவத்தையே முதற் கதையாக்கினேன். தொடர்ந்து ஒரு ஆண்டில் பதினைந்து சிறுகதைகளையும் கிட்டத்தட்ட எண்பது கவிதைகளையும் பல கட்டுரைகளையும் எழுதினேன். 2013 ம் ஆண்டு டிசம்பரில் என் இரு நூல்கள் "வரலாற்றைத் தொலைத்த தமிழர்" என்னும் நூலும் "நிறம் மாறும் உறவுகள்" என்னும் சிறுகதைத் தொகுப்புக்களும் நூலாக்கம் பெற்று 2014 மே மாதத்தில் லண்டனிலும் 2015 தையில் சென்னைப் புத்தகச் சந்தையிலும் வெளியீடு செய்யப்பட்டன.
அதன்பின்னர் என் 80 கவிதைகளின் தொகுப்பு 2016 மார்கழியில் பூவரசி வெளியீடாக வெளிவந்து புத்தகக் கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டது. என்னால் 2014 தொடக்கம் எழுதப்பட்ட மிகுதி 14 சிறுகதைகள் "உணர்வுகள் கொன்றுவிடு" என்னும் சிறுகதைத் தொகுப்பாக ஜீவநதியின் வெளியீடாக 2019 பங்குனியில் என் ஊரான இணுவிலில் உள்ள அறிவாலய அரங்கில் வெளியிடப்பட்டது. மொத்தமாக நான்கு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த விருதையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் விருதுக்காக அனுப்பப்படுமளவு என் எழுத்துக்கள் மேன்மையடையவில்லை என்றும் எண்ணலாம். அதைவிட யாரிடமும் நான் விருதுக்காக என் கதைகளை பரிந்துரைக்கவுமில்லை. மலைகள், ஜீவநதி, ஞானம் போன்றவற்றில் என் ஆக்கங்கள் சில வந்திருந்தாலும் யாழ் இணையத்தில் எழுதுவதோடு மட்டும் நான் திருப்தியடைந்துகொள்கிறேன். மற்றைய இணையத்தளங்களுக்கோ அன்றி செய்தித்தாள்களுக்கோகூட நான் எதையும் அனுப்புவதேயில்லை.
கேள்வி (16) வரலாற்றுக் கட்டுரைகளை எழுதுபவர்கள் ஒரு இனக்குழுமத்தைப் பற்றி எழுதும்போது சார்புநிலைக்குத் தக்கதாக சில வரலாற்றுத் தடங்களை தவிர்த்துவிட்டு, அந்த இனத்தின் மேன்மைமிகு நிகழ்வுகளை அல்லது சம்பவங்களை மட்டுமே எழுதுவது பற்றி உங்கள் அபிப்பராயம் என்ன?
வரலாற்றுக்கு கட்டுரைகளை எழுதுபவர்களில் பலர் அகழ்வாய்வாளராக இருப்பதில்லை. தம் அறிவுக்கு எட்டியவரை தாம் மற்றவர்களினூடாக அல்லது அறிந்துகொண்ட தகவல்களை மையமாக வைத்து தம் மனதுக்கும் காட்சிக்கும் ஏற்புடையதானத்தை மட்டும் வைத்து எழுத்துப்பரப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும் அறிவார்ந்தவராகக் காட்டிக்கொள்வதற்கு மட்டுமே எழுதுகின்றனர். அவர்கள் வேறெதையும் பற்றிச் சிந்திப்பதுமில்லை. மற்றைய இனத்தைப்பற்றி அக்கறையோ கொள்வதுமில்லை.
-ஒரு வரலாற்று ஆசிரியரும் ஊடகவியலாளருமான ஒரு கல்விமானிடம் இதே கேள்வியைக் கேட்ட போது வரலாறுகள் யாவும் சார்பு நிலையிலேதான் எழுதப்படுகின்றது. அது தவிர்க்க முடியாதது எனறு சொன்னார் அவர் கருத்துப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்றுதொட்டு இன்றுவரை பலர் முறையான அகழ்வாய்வுகளினூடே உண்மைகளை நிலைநாட்ட முனைந்தாலும் பல வல்லரசுகளின் தலையீடுகளின்றி அவர்களால் எவற்றையும் சுதந்திரமாக உலகுக்கு கூற முடிவதில்லை. அதற்குக் காரணம் உலகின் தொன்மைமிக்க இனங்களாக, முதலில் நாகரீகம் அடைந்த இனங்களாக ,அறிவுபூர்வமான கண்டுபிடிப்புக்களுக்குக் காரணமானவர்களாகக் கறுப்பு இனங்களே ஆடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது உலக வல்லரசுகளாக இருக்கும் வெள்ளை இனத்தவருக்கு அவை ஏற்புடையதல்ல. தேவையற்றுப் பல போர்களை ஆரம்பித்து தொன்மையை அடையாளங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கிருந்து அகழ்வுப் பொருட்களையும் செல்வங்களையும் எடுத்துவிட்டு அடையாளங்களைச் சிறிதுமின்றி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு நூற்றாண்டின் பின்னர் உலகின் தொன்மையான இனம் வெள்ளை இனத்தவர்கள் என்று அவர்கள் கூறும்போது அதற்கு எதிர்ச் சான்றுகளாக எவையும் இருக்கப்போவதில்லை. இருப்பவர்களும் அதுபற்றிக் கவலை கொள்ளப் போவதில்லை. அதற்கான பாரிய திட்டமிடல்கள்தான் இந்த வரலாற்றுச் சார்புநிலைகளும் ஆவண அழிப்புக்களும். எம் கண்முன்னாலேயே கீழடி ஆய்வை நிறுத்த இந்திய அரசு செய்தவற்றைப் பார்த்துக்கொண்டு மட்டும்தானே எல்லோரும் இருக்கின்றனர். 
கேள்வி (17): நீண்ட காலமாக பெண்கள் மத்தியில் தாம் தொடர்ந்தம் அடிமைப்பட்ட நிலையிலேயே  இருந்து வருகிறோம் என்ற நம்பிக்கை  நீடித்துக் கொண்டே வருகின்றது.இது உலக நாடுகளில் உள்ள அனைத்து இனப் பெண்களிடமும் காணப்படுகின்றது.குறிப்பாக பெண் விடுதலையில் பாரிய வளர்ச்சியடைந்த  ஐரோப்பிய நாட்டுப் பெண்கள் தாம் இன்னும் ஆணாதிக்கத்தினாலும்  சமூகத்தினாலும்  விடுதலை அடையவில்லை இன்னமும் கருதி வருகிறார்கள்.நீங்கள் இதுவரையில் பெண் விடுதலை சம்பந்தமாக நீங்கள் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக அனுபவித்துக் கொண்ட அனுபவங்கள் ரீதியாகவும்,உலகப் பார்வையில் நீங்கள் கவனித்ததை வைத்தும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?.
இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தபின்னும்கூடத் தொடர்ந்தும் பெண்கள் பலர் அடிமைப்படுத்தப்பட்டு பல கொடுமைகளுக்கு முகம்கொடுத்தபடிதான் இன்றுவரை இருக்கிறார்கள். நாகரிக வளர்ச்சசியும் பெண்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களும் முதன்மையாக இருக்கும் ஐரோப்பிய நாடென்றாலென்ன, உலகம் முழுவதும் கூட அடிமைநிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அதற்கான புறக்காரணிகளாக தொழில், ஊதியம், ஆணாதிக்க அரசியல் சமூகக் கட்டமைப்புக்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பினும் குடும்ப அமைப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது முதற்கொண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் பெண்தான் என்னும் நிலையில் பல தடைகளையும் அனுசரிதத்தல்களையும் பெண்கள் ஏற்கவேண்டியுள்ள அதேவேளை ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு  விருப்புவெறுப்பின்றி இசைந்துபோகவேண்டிய கட்டாயத் திணிப்பும் பெண்களுக்கெதிரானதொரு பாரிய அடக்குமுறைதான். ஆனாலும் தன் கணவன் என்னும் ஆணால் அடக்கி வைக்கப்படும் ஒரு பெண், தான் பெற்ற பிள்ளைகளிடையே ஆண், பெண் பாகுபாட்டைக் காட்டியே வளர்ப்பதும், பெண்கள் மதிப்பாக நடத்தப்படவேண்டும் என்பதை தன் ஆண் பிள்ளைக்குச் சொல்லி, அப்பிள்ளையை ஒரு நல்ல ஆணாக வளர்க்காத தவறும் வீட்டில் தன் தாய் தந்தையால் நடத்தப்படும் நிலை பார்த்து, சமூகத்தின் ஆணாதிக்க  சிந்தனையோடு வளரும் ஆண்குழந்தை போற்ற காரணிகளும் முக்கியமாகப் பெண்கள், தாமே தம் சுதந்திரம் பற்றி அறியாதவர்களாகவும் அடக்குமுறைகளை உடைத்து வெளியேவரும் மனோதிடம் அற்றவர்களாக எம் சமூக அமைப்பு கட்டமைத்து வைக்கப்பட்டுள்ளதுமே பாரிய பின்னடைவுகளாகும். அத்தோடு வலுவான ஆணின் உடலமைப்பும் பின்விளைவுகளற்ற நிலையுமே அவர்களுக்குச்ச்சார்பாயும் பெண்களுக்கு எதிராகவும் உள்ளன. பெண்கள் விரும்பித் துணிவுபெற்றாலன்றி பெண்ணடிமைத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகின்றது.
-எழுத்துத்துறையிலிருக்கும் நீங்கள், உண்மையில் பெண்கள் விடுதலை அடையவில்லை என்பதற்கு சொல்லும் காரணங்கள் எவை?
எழுத்துத்துறையே அதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆண்களால் சூளப்பட்ட உலகில் அத்தனையும் ஆண்களின் கைகளிலேயே உள்ளது. பெண் எத்தனை சிறந்த எழுத்தாளரானாலும் ஆணே முதன்மைப்படுத்தப்படுகின்றான். முன்னே வரும் பெண்கள் எதோ ஒருவகையில் புறம் தள்ளப்படுகின்றனர். அதாவது ஆண் சார்ந்து நிர்ப்பவரை புகழ்வதும் எதிர்ப்பவரை இகழ்வதும் இன்றுவரை தொடர்கிறது. சமையலறை என்னும் சுரங்க அறையிலிருந்து மீண்டுவர முடியாதபடி குழந்தைகள், கணவன் என்னும் வட்டத்துள் வீழ்ந்து கிடப்பதுடன் நின்றுவிடாது பேரக்குழந்தைகள் என்றும் தற்போதைய இடம்பெயர்ந்த சமூகம் பெற்றதாயை அடிமையாக்கி மகிழ்கிறது. தான் நினைத்த நேரம் தூங்கி எழுந்து, தனக்கு விரும்பியதை சமைத்துண்டு, தனக்கு ஏற்படும் சிறிய சிறிய ஆசைகளை தன் கணவன் பிள்ளைகளிடம் கேட்காமல் நிறைவேற்ற முடிகிற பெண்ணே சுதந்திரமான பெண் என்பேன்.  இந்த சுதந்திர நிலை புலம்பெயர்ந்த பெண்கள் சிலருக்கு இருக்கின்றபோதும் பல பெண்கள் ( வெள்ளை இனப் பெண்கள் உட்பட ) இன்னும் கணவனுக்குப், பிள்ளைகளுக்கு, சமூகத்துக்குப் பயந்து அடிமைத்தனத்துடன் உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
கேள்வி (18) கற்பு என்பது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?.
கற்பு என்பது மனம் சார்ந்ததுதான். அதை தம்வசதிக்காக உடல் சார்ந்ததாக ஆண்களும் இச்சமூகமும் கட்டமைத்து வைத்துள்ளது. ஒருவர் தனக்குத்தானே நேர்மையுடன் இருக்கவேண்டும். தான் வாழும் சமூகம் உறவுகள்,குடும்பம் எல்லாவற்றையும் நேர்மையுடன் அனுசரித்து, அவர்களுக்கு எதிர்மறையான விடயங்களை, தன் குடும்பத்துக்கேனும் தீங்கு நேராத உண்மைத் தன்மையுடன் வாழ்தலே கற்பு என்பேன் நான்.
-பெண்களுக்கு மட்டுந்தான் கற்புநெறி தேவை ஆண்களுக்குத் தேவையில்லை என்று சொல்வது சரியா?
இருபாலாருக்கும் பொதுவானதுதான் கற்பு ஆயினும் உடலியல் ரீதியாக அந்தக்காலத்தில் பெண்ணை அடக்கவும் தன் உடல் இச்சைகளைத் தீர்க்கவும் தன்னை விட்டுப் பெண் வேறு ஆணை நாடாதிருக்கும் பொருட்டு ஆணால் உருவாக்கப்பட்ட சொல்லே கற்பு. கணவனை விடுத்து ஒரு பெண் இடையில் வேறு ஆணை நாடிச் செல்லும்போது அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் அது அப்பிள்ளைகளின் வாழ்வில் பலமான அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதற்காகவும் இருக்கலாம். அத்தோடு இவள் பெண் . என்னை இவள் விட்டு வேறொருவனை நாடுவதா என்னும் இறுமாப்பில் கூட ஆண்கள் பெண்ணுக்கு மட்டும் கற்பு என்று கூறியிருக்கலாம். அது ஒரு குடும்ப உறவுக்கு, சமூகத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்னும் நல்ல எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் பின்னாளில் ஆண்களின் தவறுகள் பெண்கள்மேல் திணிக்கப்பட்டு, பெண்கள் மட்டுமே தண்டைக்குரியவர்களாகக் கருதப்பட்டனர். ஆண்கள் தப்பித்துக்கொண்டனர். பெண்கள், ஆண்கள் கற்பிழப்பதனால் எத்தனையோ குடும்பங்கள் சிதைந்துபோயுள்ளன. ஆகவே ஆணும் பெண்ணும் கற்போடிருத்தலே சிறந்தது.
கேள்வி (19) உங்களிடம் கேட்கப்பட்ட ஆறாவது கேள்விக்கான  பதிலில் சாதரணர் அல்லாதவர்களுக்கு  அவர்களுக்கு விளங்குபடி எழுத வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தீர்கள். சாதாரண மனிதர் நிலையிலிருந்துதான்  சாதாரண அல்லாத நிலைக்கு வந்தவர்களாதலால் சாதாரண மனிதர்கள் வாசித்து விளங்கிக் கொள்ளும் கதைகளை  சாதாரண அல்லாதவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்களா?
நான் கூறியது சாதாரணர் அல்லாதோருக்கு அவர்களுக்கு ஏற்றாற்போல் எழுதவேண்டும் என்றேன்.அவர்களால் சாதாரண கதைகளையும் வாசித்து விளங்க முடியும். எல்லோராலும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. அதற்காக ஒரேமாதிரியான கதைகளையும் எல்லோரும் எழுத முடியாது. அவரவர் அறிவின் தரத்துக்கேற்பவே எழுத முடியும். இலக்கியம் என்றால் எல்லாமும்தான் அடக்கும். சாதாரண மக்களும் ஒளவை கூறிய ஆத்திசூடியைப் புரிந்துகொண்ட அளவு திருக்குறளையோ அன்றி தொல்காப்பியத்தையோ புரிந்துகொள்ள முடியுமா?  அதுபோன்றதுதான் கதைகளும்.
கேள்வி (20) உங்களிடம் கேட்கப்பட்ட எட்டாவது கேள்விக்கான பதிலில் "பொன்னியின் செல்வன் " ஒரு இலக்கிய நாவல் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மன்னர் காலத்து அரசுகளின் நிர்வாக கட்டமைப்பும் அரசியல் சார்ந்ததுதான் - அது மன்னர் காலத்து அரசியலாகும். எனவே  அரசியல் சார்ந்ததுதான் என்பதை மறுக்கிறீர்களா?
நிட்சமாக மறுக்கிறேன். அந்நூலை எழுதிய கல்கி  அவர்கள் சோழர் காலத்தில் வாழ்ந்தாரா? அல்லது அவர் எழுதியபோதுகூட சோழர் ஆட்சி இருந்ததா? அது ஒரு சிறந்த வரலாற்றுப் புனைவு. அவர் எழுதியவற்றில் 50 வீதம் கூட அக்காலத்தில் நடந்திருக்காமல் இருந்திருக்கலாம் அல்லது நடந்திருக்கலாம். அனால் அந்நாவல் அவர் எழுதியபின் அந்நாட்டு அரசியலில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தியதா அல்லது அந்நாட்டு மக்களுக்கு அரசியல்த் தெளிவை ஏற்படுத்தியதா? அன்றி அரசியல் மாற்றமேலும் ஏற்பட்டதா ? எதுவுமே இல்லையே. பாரதியார் கவிதைகள்  சுதந்திரப்போரில் பல மனங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி விடுதலைப்போரில் மக்களை இணைய வைத்தன. ஈழத்தில் எழுதப்பட்ட இக்கியங்கள் மக்களிடமும் அரசியலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவைதான் அரசியல் சார்ந்த இலக்கியம் எனலாமேயன்றி பொன்னியின் செல்வன் சாதாரண ஒரு வரலாற்றைப்பற்றிப் புனையப்படட சிறந்த இலக்கியம். அவ்வளவே.
கேள்வி (21) ஒரு சாதாரண குடிமகனே தனது மனைவி பலபேருக்கு  முன்னாள் அவமானப்படும்  போது உயிரைத் துச்சமென நினைத்து வெகுண்டெழுவான்.ஆனால் பலபேர் முன்னிலையில் தங்களுடைய மனைவியான பாஞ்சாலி துகிலுரியப்பட்ட போது வாழவிருந்த பஞ்சபாண்டவர்கள் கோழைகள்தானே?. உங்கள் பார்வை என்ன?
இது ஒரு உண்மைச் சம்பவமா அல்லது புனைவா என்னும் தர்க்கம் நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பஞ்சபாண்டவர்கள் எந்த இனத்தவர்? போருக்குத் துணிவுடன் தன் மகனை அனுப்பிய தாய் தொடங்கி புறநானூற்றுப் பாடல்களில் எல்லாம் தமிழர்கள் வீரம் செறிந்து கிடக்கிறது. மானத்தைப் பெரிதாகத் தமிழர்கள் மதித்து வாழ்ந்தார்கள் என்பதை பல கதைகள், பாடல்களினூடாக நாம் அறிந்துள்ளோம். மனித இனம் நாகரீகம் அடைந்த காலம் தொட்டு மனிதன் தன் இருப்பைத் தங்கவைத்துக்கொல்வதில் பாரிய முனைப்புக் காட்டியுள்ளான். அப்படி இருக்க அரசாண்ட மன்னர்கள் எதுவித சிந்தனையும் இன்றி அனைத்தையும் இழப்பதும் கட்டிய மனைவியையும்  வைத்தே சூது விளையாடினார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் முடியவில்லை. அப்படியாயினும் ஒரு பெண்ணை மற்றவர் துயிலுரியும்போது எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருப்பது கோழைத்தனத்தின் உச்சம் மட்டுமல்ல அவர்கள் ஆண்கள் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. சிலவேளைகளில் வேற்று இனத்தவர்களிடையே நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து ஒரு சிறந்த எழுத்தாளரான வியாசரின் கற்பனையில் வடிவமைக்கப்பட்ட சம்ஸ்கிருத நூலைப்பற்றி நாம் கவலை கொள்ளத் தேவை இல்லை.
கேள்வி (22) சீதையை நம்பாமல் அவளின் கற்பை பரிசோதிக்க நெருப்பினுள் இறங்கச் செய்த இராமனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இதுவும் வாலமீகி என்பவரால் எழுதப்பட்ட வடமொழி நூல்தான். இந்நூலிலும் பல இடைச் சொருகல்கள் ஏற்பட்டிருக்கும். அதில் ஒன்றுதான் சீதை தீக்குளிப்பு என்பதும் என நான் எண்ணுகிறேன். ஆனாலும் ஆண்களை பொறுத்தவரை பெண்களில் சந்தேகம் கொள்வது அன்றுதொட்டு நடைபெற்று வருகிறதுதான். இச் சம்பவத்தின் மூலம் கடவுளாக இவர்கள் சித்தரித்த இராமன் என்பவன் சாதாரண மனிதன்தான் என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளாமலாமா???
கேள்வி (23) நீங்கள் பெற்ற விருதுகள் எத்தனை?.எங்கெங்கு அவற்றைப் பெற்றீர்கள்?.
நான் இதுவரை விருதுகள் எவற்றையும் பெறவில்லை. என் நூல்கள் விருதுகளுக்குத் தகுதியானவையா என்பதுக்குமப்பால் நான்குபேரின் முடியில் ஒருவரின் எழுத்துத் தங்கியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அத்தோடு அந்த நான்குபேரின் பரிந்துரைப்பில் எனக்கு விருது கிடைக்கவேண்டும் என்று நான் எண்ணுவதும் இல்லை. அதற்காக உள்ள இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விருது வழங்குநர்களுக்கும் என் கதைகளை அனுப்பிக்கொண்டிருப்பதும் இல்லை. நான் யாழ் இணையத்தில் என் கதைகளை பகிர்ந்துகொள்வதுடன் திருப்தியடைகிறேன். சிலர் கேட்டால் மட்டும் சில தளங்களுக்கு என்கதையை அனுப்பிவைப்பது. மற்றப்படி தகுதியே இல்லாத சிலரின் எழுத்துக்கு அவரின் முகத்துக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ கிடைத்திருக்கும் விருதுகளை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.
 

No comments:

Post a Comment