Thursday 7 May 2015

எனக்குப் பிரியமான உன்னிடம் - கவிதை






எனக்குப் பிரியமான உன்னிடம்
எனக்காக எதுவுமே
எப்போதும் இருந்ததில்லை
எல்லைகளற்று என் வெளிகள்
உனக்காகக் காத்திருக்கையிலும்
பற்றேதும் அற்றவனாய்
என்முன்னே நீ

உருவமற்ற சிந்தனைகள்
உள்வெளியெங்கிலும் உன்னுடனே
ஊசலாடும் உறவின் விளிம்புகளில்
ஊமைக்காயங்களுடன் நான்
உன் சிறு பதில்தரும் பசுமைக்காக
உறக்கமிழந்து காத்திருக்கையிலும்
எதுவுமேயற்று எப்போதும் போல் நீ

நீண்டு கிடக்கும் நெடுங்காலங்களின்
நெய்யமுடியாத காலக் கசிவை
நகர்த்தமுடியாத முடிச்சுக்களோடு
நகர்த்தி நிமிர்த்தும் முயற்சியில்
நிரந்தரமாய் நிந்திக்கும் வேளையும்
நேற்றும் இன்றும் நாளையுமாகி
நம்பிக்கைதரும் நியதிகளேயற்று
நகர்ந்துகொண்டிருக்கிறாய் என்னுடன் நீ

விட்டு விலகிடமுடியா முடிவில்
முட்கள் நடுவே நிதம் முட்டியபடி
எனைச் சுற்றிலும் எதிர்வினைகள்
எதிரும் புதிருமாய் சுழன்றாட
கூடு பாயக் காத்திருக்கும் மனம்
குற்றுயிராய் தினம் தினம்
கொடுவனத்தின் குழிநடுவே
கிடப்பதுவாய் காண்கின்றதாய்
அப்போதும் அந்தரித்து உழலும்
அல்லல் உணரா மனத்தினனாய்
அசையா மனதுகொண்டு அசைகிறாய் நீ








No comments:

Post a Comment