Thursday 30 October 2014

மறக்க முடியாத - கவிதை


மறக்க முடியாத மரணத்தின் வலியாகி
துறக்க முடியாத துயரத்தின் வடிவாகி
கடக்க முடியாத காலத்தின் கனவாகி
சுமக்க முடியாத சுமையாய் இருப்பது காதல்

தடுக்க முடியா தவிப்பில் உருவாகி
தவிர்க்க முடியா தடைகள் உடைத்தாகி
விடுக்க முடியா வேர்கள் விழுதாகி
விலக்க முடியா வினைகள் கொண்டது காதல்


கொடுக்க முடியாக் கொடைகள் கொடுத்தாகி 
இழக்க முடியா எல்லாம் இழந்தாகி
துறக்க முடியா துறப்பும் துறந்தாகி 
அடக்க முடியா மனதும் கொண்டது காதல்

எதிர்க்க முடியா எல்லாம் எருவாகி
ஏற்க முடியா எல்லாம் ஏற்றாகி
எதுவும் முடியா எண்ணம் முடித்தாகி
எதிர்வினை அற்றிருபது காதல் 

தொடங்குவது தடுக்கா முடிவாகி 
தொடர்வது திருட்டின் வழியாகி
தேடல்கள் தெவிட்டலில் முடிவாகி
தீராப் பகை சொல்வதும் காதலே

 நிவேதா உதயன்
22.09.2014

No comments:

Post a Comment