Thursday 30 October 2014

என்னுள் வியாபித்திருக்கும் - கவிதை


என்னுள் வியாபித்திருக்கும்
எண்ணத்தின் துளிகள்
எதிர்பார்த்து ஏங்கி
என்னுள்ளே எனைத்தாக்கி
எங்கெங்கோ சுற்றி வந்து
எண்ணற்ற எதிர்வினைகளை
என்னுள்ளே ஏவுகின்றன

புரிந்தும் புரியாது நிற்கும்
மனித மனங்களின் தகவுகள்
புரிந்திடக் கூடுமான
தருணங்களைத் தவிர்த்து
புரியமுடியாச் சூழல்களை
புரியாத கணக்குகளாய்
புதிராக்கி நிற்கின்றன

காலமும் கணக்கும்
மாறா எச்சங்களாய்
மாசுபடாத பகிர்தலை
மறக்கடிப்பதற்கான
மூச்சான முயல்வில்
முரண்கள் அதிகரிக்க
முட்டுச் சந்தில் நிற்பதாய்
முகம் உணரும்

ஆனாலும் தொடர்தல்
தொடர்பின்றித் தொடர
மனம் சூழும் மூச்சுக்கள்
காற்றாகிக் கரையாது
மதம்பிடித்தாடும் மனதின்
மடைதிறக்கும் காலத்துக்காய்
முகிள்வின்றிக் காத்திருக்கவே
முடிவற்று முடிகிறது


27.10.2014
Nivetha

No comments:

Post a Comment