Saturday 26 April 2014

மறந்திடோம் வீரர்களே!! - கவிதை

 
எம்தமிழ் தேசத்திலே ஏற்றமுடன் நாம் இருந்தோம்
செந்தமிழ் தேசத்திலே சேர்ந்து நாம் வாழ்ந்திருந்தோம்
அத்தனை உறவுகளும் ஆவலாய்க் காத்திருந்தோம்
அண்ணன் பிரபாகரனின் ஆணையில் வாழ்ந்திருந்தோம்
விடுதலை விலங்ககலும் வேளைதான் பார்த்திருந்தோம்
விதி செய்த வலையினதில் வெந்தே நாம் வீந்துவிட்டோம்


அஞ்சி அஞ்சி நாம் அடிமையாய் வாளோமென
அன்னை மண்ணின் அடிமை விலங்கொடிக்க
வெஞ்சினம் கொண்டே வேங்கைகள் எழுந்தனர்
போராட்ட வீரராய் போர்க்கோலம் பூண்டனர்

சொத்து சுகங்கள்  சொந்தங்கள் இழந்தனர்
பருவ வயதின்  பற்றெல்லாம் துறந்தனர்
அன்னை மண் காத்திட அத்தனை பேரும்
ஆயுதங்கள் தாங்கி ஆணைகள் காத்தனர்

புன்னகையுடன் அன்று பொருதிடச் சென்றனர்
புறநானூறு படைத்தே புனிதராய் நின்றனர்
சுதந்திரம் வேண்டி சுவாசத்தைச் சிறைப்பிடித்து
விடுதலை வேட்கையின் வடுக்கள் ஆயினர் 

பொன்னான மேனியையே போருக்காய்த் தந்தனர் 
போராட்ட வீரர்களாய் புண்ணாகி வெந்தனர்
பகைவன் படை துரத்தி பார் புகழ வைத்தனர்
பார்த்தோர் வியக்க நம் தேசம் அமைத்தனர்

அத்தனையும் எத்தர்களால் அழிந்து போனதுவே
உத்தமர்கள் எல்லாம் உருக்குலைந்து போயினரே
யார் கண் பட்டதுவோ யாம் செய்த பாவமதோ
உலகமெலாம் சேர்ந்தெம்மை உழுது போட்டனரே

என்ன சொல்லி நாமழுதும் ஏதும் வரப்போவதில்லை
எத்தனை பாடுபட்டோம் எள்ளளவும் பயனுமில்லை
ஏங்கி நாம் உமை நினைந்து எப்போதழுதாலும்
என்றும் நீர் எம்முன்னே எழுந்து வரப் போவதில்லை

காலத்தின் கோலமடா கார்த்திகை தீபமடா
கண்களில் நீரலைய காத்திருக்கின்றோமடா
காலங்கள் கரைந்திடினும் கனவை நனவாக்க
காரிருளில் கரைதேடி கால்பதிக்க காத்திருக்க

கார்முகில் கரையொதுங்க கண்மணிகள் உங்கள்
கனவு நிறைவேற்றும் கணப்பொழுது  வந்திடும்
போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்
புனிதர்கள் உம்கனவு நம் மண்ணில் நனவாகும்

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து
மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்
மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!
மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!


நிவேதா
21.11.2013

No comments:

Post a Comment