காகிதக் கப்பல் செய்து
கடலினில் ஓடவிட்டு
கனவில் மிதந்த மனம்
காற்றுப் பட்டதும்
கனவாகிப் போனது
கோடை மழையைக்
கார்கால மழையென
கொண்டாடிக் குதூகலமாய்
வரவேற்ற வேளை
கோடையிடி இடித்து மழை
காணாமற் போனது
ஒன்று மட்டும் தெரிந்தது
ஏதும் எமக்கானதில்லை
எல்லைகள் கொண்டு
எட்டியே நின்றிடும்
எதிரி போல் எம்மை
ஏங்க வைத்திடும்
அதுவே எம் விதியாய்
எல்லாமே செய்திடும்
ஆகவே எண்ணமே நீ
எப்போதும் என்னதாய் இரு
எதுவும் எதிர் பார்த்து
ஏக்கம் கொள்ளாதிரு
எண்ணக் கருவை
உன்னுள்ளே பூட்டி
எவர் முன்னும் உன்னை
எழுதாதிரு
எப்போதும் உனக்கு மட்டுமாய்
இரவுகள் இருக்கின்றன
வான வெளியின்
வண்ணமிழந்த நிறத்திடையே
வேண்டிய மட்டுமாய்
உனக்கான வெற்றிடம்
அங்கே உன் மனம்
எதுவும் செய்யலாம்
எல்லைகளற்று எவருமற்று !!
No comments:
Post a Comment