Saturday 26 April 2014

காகிதக் கப்பல்

காகிதக் கப்பல் செய்து
கடலினில் ஓடவிட்டு
கனவில் மிதந்த மனம்
காற்றுப் பட்டதும்
கனவாகிப் போனது

கோடை மழையைக்
கார்கால மழையென
கொண்டாடிக் குதூகலமாய்
வரவேற்ற வேளை
கோடையிடி இடித்து மழை
காணாமற் போனது

ஒன்று மட்டும் தெரிந்தது
ஏதும் எமக்கானதில்லை
எல்லைகள் கொண்டு
எட்டியே நின்றிடும்
எதிரி போல் எம்மை
ஏங்க வைத்திடும்
அதுவே எம் விதியாய்
எல்லாமே செய்திடும்

ஆகவே எண்ணமே நீ
எப்போதும் என்னதாய் இரு
எதுவும் எதிர் பார்த்து
ஏக்கம் கொள்ளாதிரு
எண்ணக் கருவை
உன்னுள்ளே பூட்டி
எவர் முன்னும் உன்னை
எழுதாதிரு

எப்போதும் உனக்கு மட்டுமாய்
இரவுகள் இருக்கின்றன
வான வெளியின்
வண்ணமிழந்த நிறத்திடையே
வேண்டிய மட்டுமாய்
உனக்கான வெற்றிடம்
அங்கே உன் மனம்
எதுவும் செய்யலாம்

எல்லைகளற்று எவருமற்று !!

No comments:

Post a Comment