Saturday 26 April 2014

கனவு

வெண் மணற் பரப்பில் கால் புதைய
கனவுகள் சுமந்து நடக்கையில்
காலில் இடறிய கல்லின் காயத்தில்
கண்ணீர் கனதியானது

காலங்கள் காத்திருக்கலாம்
என் காயம் ஆற்ற - ஆனாலும்
இழந்த நேரத்தின் இன்பங்கள்
கணக்கில் வாராது கனவுகளாய்
நீரில் போட்ட கோலம்
நினைவில் அழிந்து போவதுபோல்
காலத்தின் கணக்குகளும் - ஒருநாள்
காலாவதி ஆகலாம்

எண்ணற்ற எண்ணங்களின் குவியல்
எப்போதும் என்நெஞ்சிருக்க
போராடும் தெம்பின்றி
போருக்கும் எதிரே யாருமின்றி
பொங்கிடும் மனதின் பொழுதுகள்
போக்கிடமின்றி போட்டிபோட
ஏற்புடையது அல்லவெனினும்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
எப்போதும் என்னுடனே இருக்கும்
சிதைந்துபோன கனவுகளின்
சேமிப்பின் நினைவுகள்

No comments:

Post a Comment