Saturday 26 April 2014

பேதைப் பெண்ணே - கவிதை

பெண்ணின் பெருமை பேசி
பெண்ணை அடிமை கொள்வார் 
பெண்ணைப் புகழ்ந்து பாடி 
பேதைமை கொள்ள வைப்பார்
பொன்னே மணியே என்றும்
பூவின் வாசமென்றும்
பேசிப் பேசிப் பெண்ணைப்
பேச்சிழக்க வைத்திடுவார்
பூரணை நிலவுபோல்
புகுந்தவீடு வருபவள்
பத்தும் தேய்த்து தான் தேய்ந்து
பழையதாய் ஆகியபின்
பெண்ணா நீ என்று
பேசியே கொன்றிடுவர்
பாலைவனத்தின் பசுந்தளிரே
போதை கொள்ள வைக்கும் 
பணக்கள்ளே பவளமே
பென்னரங்கே பொன்மணியே
போற்றி உனைத் தொழுவேன்
பவளமே எனக் கூறிப்
பத்திரமாய்ப் பூட்டிவைப்பார்
பாவையரை வீட்டினுள்ளே
பாழாய்ப் போன பெண்கள்
பூட்டியது தெரியாது
பெண்ணென்றால் இதுவென்று
பெருமை மிகக் கொண்டிடுவார்
பண்பாடு இதுவென்று
பட்டிகள் போல் நடத்துவதை
பெருமிதமாய் எண்ணி
பொங்கும் மனதடங்க
புத்தகமாய் ஆகிடுவார்
பேதைப் பெண்ணே நீயின்றி
பேருலகே இல்லையடி
பூமிப்பந்தில் நீயின்றேல் 
புருஷர்களும் இல்லையடி
போற்றி உனைக் கொண்டாடும்
பெரு மனதும் இல்லையடி 
போகட்டும் விட்டுவிடு
பாவமடி ஆணினமே
பொங்கி நாம் எழுந்திட்டால்
போக இடம் இன்றி 
புலம்பிப் புலம்பியே
பித்தராய் ஆகிடுவார்
பெருமனது கொண்டவளே
பெற்றவர்க்காய் உற்றவர்க்காய்
பெற்றெடுத்த பிள்ளைக்காய்
பெற்றிடும் இன்பங்கள்
பலதும் நீ துறந்து
பலன் எதுவும் பாராது 
பாடையில் போகும் வரை
பாங்குடன் நடந்திடடி

No comments:

Post a Comment