Monday 22 April 2013

கலங்கித் தவிக்காதே

தமிழ் பெண்ணே நீ
தாழ்ந்தது போதுமடி
தலை நிமிர்ந்தே நீ
வாழ்ந்திட வேண்டுமடி
தாரத்தைத் தாயாய்
எண்ணிய மண்ணில்
தரையில் புழுவாய் நீ
தவள்வதும் ஏனோ

பெண்ணின் பெருமை பேசி
அடிமை ஆக்கிட்டார்
பேதைமை கொண்டே நாம்
பேச்சற்றிருந்துவிட்டோம்

பேரினவாதம் பேதைகளை
பேச்சற்று மூச்சறுக்க
பேடிகள் போல் இன்னும்
பயந்து ஒளியலாமோ

உன்னைத் தொடுபவனை
உக்கிரமாய் எதிர்த்திடடி
உடலைத் தொடுபவனை
ஊசி கொண்டு கிழித்திடடி

பின்வாசல் வருபவனை
பிணமாய் அனுப்பிவிடு
முன்வாசல் வருபவனை
மூக்கறுத்து அனுப்பிவிடு

மோகத்தில் வருபவனை
மோதியே கொன்றுவிடு
மூடர்கள் வந்தால்
முட்டி நீயும் கொன்றுவிடு

காமுகன் வந்தால்
காதை நீ அறுத்துவிடு
சேர்ந்து வருவோரின்
சங்கை நீ அறுத்துவிடு

கைகள் இரண்டை
கடவுள் தந்துள்ளான்
காரிகையே நீயும்
கலங்கித் தவிக்காதே

உயிர் போகும் ஒருமுறை
அதை எண்ணி அஞ்சாதே
உத்தமியாய் வாளும்
உன் உரிமைதனை
எத்தர்களுக்காய் நீ
எப்போதும் ஈயாதே

என்னை நான் நீயாக
எண்ணிக் கலங்கியதால்
இத்தனையும் எழுதிவிட்டேன்
ஈழப் பெண்ணே
இயலுமாய் எண்ணி
இனிமேலும் எதிர்த்திட்டால்
எத்தன் ஒருவனும்
உனை எட்டியும் பார்த்திடான்

No comments:

Post a Comment