Monday 22 April 2013

மண்ணுக்காய் மரணித்த மாவீரரே

மண்ணுக்காய் மரணித்த மாவீரரே
மண்டியிடுகின்றோம் உங்கள் முன்

மரணத்தை மகிழ்வாய் ஏற்று
மார்பில் குண்டேந்தி மாவீரரானீர்
தேசம் என்னும் தேனடைக்காய்
தெருவெங்கும் நீர் தேரிழுத்தீர்

பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும்
பட்டினி கிடந்து பதமாய் ஆனீர்
பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து
பாரினில் எம்மக்கோர் பாதையானீர்

பள்ளிசெல்லும் பருவத்தில்
பட்டு மெத்தை சுகம் துறந்து
பெண்ணும் ஆணும் சரிநிகராய்
பெருமை கொள்ளச் செய்திட்டீர்

பெற்றவள் முகம் மறந்து
உற்றவர் தனைத் துறந்து
உம் தேசம் காப்பதற்காய்
உயிர் தந்த உத்தமரே உம்மை
நாம் எப்படி வணங்கிடுவோம்

பேதைமை கொண்டவர்கள்
பேர் வாங்கப் பணம் கொடுப்பார்
பொன் கொடுப்பார் பொருள் கொடுப்பார்
தம்முயிரை உம்மைப்போல் யார்கொடுப்பார்
தரணியில் ஒருவரை நீ கூறு

பாசறைகள் பல கடந்து
பிணம் தின்னும் பேய் கடந்து
புறங் கண்டு ஓடாது போர்புரிந்தீர்
புண்ணிய பூமிதனில் யாருளர்
உம்மையன்றி நாம் போற்றி வணங்கிட

மூவேளை உணவின்றி
முகிழ்ந்திடும் ஆசையின்றி
மூச்செல்லாம் மண்மீதாய்
முழுதும் கொடுத்தவரே
உம் மேன்மைகள் சொல்லிட
மேதினியில் மொழியில்லை

ஒன்றல்ல இரண்டல்ல மூன்றுமல்ல
ஆயிரம் ஆயிரம் நாமிழந்தோம்
அத்தனை நாடுகள் எம்மை அழிக்கையில்
எத்தனை பேர் நாம் பாத்திருந்தோம்
எள்ளி நகையாடி எட்டப்பர் சிரிக்கையில்
ஏனென்று கேட்காமல் நாமிருந்தோம்

பெண்கள் குழந்தைகள் பெரியவர் என்று
பேதமின்றி கொன்று குவிக்கையில்
பேடிகள் போல் நாம் காத்திருந்தோம்
அங்கம் இழந்தவர் அங்கு துடிக்கையில்
அந்நியராய் நாம் பார்த்திருந்தோம்

தேசம் அழிந்தது மானம் அழிந்தது
மண்டியிட நாம் காத்திருந்தோம்
மண்ணையும் பெண்ணையும்
மாற்றானிடம் கொடுத்தும்
மானம் இன்றிப் பாத்திருந்தோம்

மன்னிக்க முடியா குற்றங்கள் எமது
மாவீரரே நீர் காத்தருள்வீர்.
உம்மை அன்றி வேறொருவர்
என்றும் எம்மிடை வரமாட்டார்
மறுபிறப்பொன்றில் மண்மீட்க
மீண்டும் ஒருமுறை பிறந்து வந்து
மீட்டிடுவீர் எம் தேசமதை

No comments:

Post a Comment