Wednesday 11 June 2014

ஆதங்கம்



கொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்வதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது எனக்கு.

இப்படித் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தால் இவளுக்கு நாளாக ஆக காதே கேட்காது விட்டுவிடும். அதை அவளிடம் கூறுவோம் என நினைத்தும் அவள் என்ன நினைக்கிறாளோ என எண்ணி இதுவரை கூறவே இல்லை. என்னதான் கதைக்கிறாள் என ஓட்டுக்கேட்போமா என ஒவ்வொரு தடவையும் எண்ணுவதுதான். பின்னும் எதற்காக மற்றவர் விடயத்தில் தலையிடுவது என்னும் நாகரிகம் கருதி கேட்பதே இல்லை.

திருமணமாகிக் குழந்தை குட்டி எல்லாம் கூட இருக்கிறது. முன்பு சில நாள் மாலையில் சமையல் செய்தபடி எல்லாம் கதைத்துக்கொண்டிருப்பாள். பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு கறி அடிப்பிடிக்கப் போகிறதே என்று பதைப்பாக இருக்கும். ஆனால் இப்பொழுது மாலையில் சமைத்து நான் பார்த்ததில்லை. அதிகாலையில் சமைக்கிறாளோ??? அல்லது கடைச் சாப்பாடுதானோ தினமும் நானறியேன். காலை எழு மணிக்கு வேலைக்குச் செல்ல தயாராகும் போதுதான் நான் அவளைப் பார்ப்பேன். அதன்பின் இரவு ஒன்பது பத்து வரை அவளுடனேயே இருப்பது.

கணவனுக்கு முன்னாள் அவள் ஒருநாளும் தொலை பேசியில் யாருடனும் அரட்டை அடித்ததில்லை. தப்பித்தவறி யாராவது போன் செய்தால் ஒன்றில் போனை எடுக்காது விட்டுவிடுவாள். அல்லது எடுத்து நான் பிசியாக இருக்கிறன். பிறகு கதைப்பமோ என நல்ல பிள்ளையாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்குச் சிரிப்பு வரும் தான் ஆனால் சிரிக்கவே மாட்டேன்.

ஒருநாள் கூட என்னை மறந்து அவள் விட்டுவிட்டுச் சென்றதே இல்லை. ஒருமுறை மறந்துவிட்டாள் தான். எனக்கு மனதின் மகிழ்ச்சி சொல்லி முடியாமல் இருந்தது. ஆனாலும் எல்லாம் சொற்ப நேரம் தான். போனவள் பத்து நிமிடத்தில் மீண்டும் வந்துவிட்டாதனால் என் அற்ப சந்தோசம் அழிந்துபோனது.

தொலைபேசியில் கதைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்று என்னதான் சட்டம் போட்டாலும் இவள் மட்டுமல்ல இன்னும் பலரும் தொலையபேசியில் பேசாது வாகனத்க்தைச் செலுத்துவதே இல்லை. அப்படியிருந்தும் ஒரு தடவை போலீஸ் மறித்து அறுபது பவுன்ஸ் அறவிட்டுவிட்டதுதான். ஒரு வாரம் காருக்குள் அவள் தொலைபேசியை எடுக்கவே இல்லை. நானும் சந்தோசம் கொண்டேன். இனிமேல் இவள் காருக்குள் கதைக்கும் தொல்லை இல்லை என்று. அடுத்த வாரம் மீண்டும் தொணதொணப்பு ஆரம்பித்துவிட்டது.

நான் இவளிடம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இதற்கு முன் யாரோ தெரியவில்லை. இன்னும் ஒரு ஆண்டு இவளின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டு நான் இருக்கவேண்டித்தான் இருக்கும். அதன் பின் என்னை என்ன செய்வாள். தூரப் போட்டுவிட்டு புதிதாக ஒன்றை வாங்கிவிடுவாளோ என்று என்னும்போதே எனக்கு வலித்தது. என்னதான் துன்பம் என்றாலும் அவளுடன் கூட இருந்தே பழகிவிட்டது. அவள் குரலும் கேட்க இனிமைதான். அதனால் அடிமனதில் அவளுடன் தொடர்ந்து இருக்கும் ஆசை ஒட்டிக்கொண்டே இருக்கிறது. பார்ப்போம் என்ன செய்கிறாள் என்று.

No comments:

Post a Comment