Wednesday 11 June 2014

இயற்கை







இயற்கை எம்மை இயன்றவரை
விட்டு வைத்திருக்கின்றது
எதோ தன்னாலான இரக்கத்தோடு
எல்லோரையும் இட்டு நிரப்பியபடி

தூயனவாய்க் காற்று துகள்களற்று
தலைவிரித்தாடாததால்
நாம் தப்பிப் பிழைக்கிறோம்
தரையில் நடக்கிறோம்

கோபத்தின் உச்சியில் ஆழ்கடல்
கொந்தளிக்காததால்
கூரைகளின் கீழ் நாம்
குதூகலங்கள் சுமந்தபடி
குளிர் காய்கிறோம்

தீயின் நாக்குகள் தீவிரமற்று
திசைமாறி இருப்பதனால்
தீங்குகள் அற்று நாம்
தில்லுமுல்லுகள் செய்தபடி
தினாவெட்டாய்த் திரிகிறோம்

பயிரிடா நிலங்கள் பரிதவிப்பின்றி
பக்குவமாய் இருப்பதனால்
பசுமை குன்றினும்
பாறைகளாகி பயன்பெறா மாந்தனின்
போலி முகம் கண்டும் தாம்
பொறுமை கொண்டு நிற்கின்றன

வானப்பெருவெளி வீழ்ந்துவிடாது
வெடிப் பிளம்புகள் சூழ்ந்துவிடாது
வெட்டி மாந்தரின் வேடிக்கை கண்டும்
வெஞ்சினம் கொண்டு வேரறுக்காது
வேடிக்கை பார்த்தபடி விண் முகடு தாண்டி
விடிகற்களாய் வீளாதிருக்கின்றன

ஆயினும் நாம் எப்போதும் எவற்றையும்
எண்ணியே பார்ப்பதில்லை
எல்லாம் இவ்வுலகில் எமக்கானதென்று
இறுமாப்புக் கொண்டு அக்கறையற்று
அல்லாடலோடு அகந்தை கொண்டு
ஆசைகளோடு ஆர்ப்பரித்திருக்கிறோம்

No comments:

Post a Comment