Monday 8 June 2015

உயிரிழையின் உன்னதம் - கவிதை




கற்பக விருட்சமாய் உன்மேல்
வியாபிக்கின்றது அன்பு
உணர்ந்தும் உணர மறுப்பவனாய்
ஒற்றைச் சொல்லில்
உணர்விழக்க வைக்கிறாய் நீ

கண்டுணர்ந்த பின்னும்
காண மறுக்கும் உயிரிழையின்
உன்னதம் பொசுக்கி நிற்க
சொற்பிறழ்வின் சுமை கனக்க
காவ முடியா மனதை கல்லாக்கி
காலம் முழுதும் உன்னுடனாய்
காவலிருக்க முயல்கிறேன்

நேசமறுத்து நினைவகல
நிந்திக்கும் மனது கண்டும்
நீண்டதூரம் உனக்காக நடக்கையில்
நிர்க்கதியாய் நிற்கவைத்து எனை
நெகிழ்வற்று நிதம் நீ நிற்கையில்
நஞ்சாகிப்போன நாட்களின்
நகராத பொழுதுகளின் நினைவுகளில்
நாளும் பொழுதும் நான் பொசுங்கும்
நரகத்தின் வாசல் மூடி என்
நித்தியக் கடனை அடைப்பவனாய்
நீயே எனைக் கருணைக்கொலை செய்துவிடு

No comments:

Post a Comment