Saturday 16 November 2013

மண்ணுக்காய் இன்னுயிர் தந்தவனே

ஈழத்தின் கரவெட்டியில்
இருபத்தேழு ஆண்டுகள் முன்
இன்னுயிராய் வந்துதித்தான்
ஈழமகன் முருகதாசனவன்

பத்து மாதம் பக்குவமாய்
பாதுகாத்துப் பெற்றுன்னை
பட்டங்கள் பெறவைத்து
பார்புகழ வைத்தார்
உன் பெர்றோர்

வன்னியிலே வஞ்சகர்
வதைகளில் சிக்கி
வாழ்விழந்து எம்மினம்
வீழ்தல் கண்டு
வெந்தழலாய் உன்மனது
கோபம் கொண்டதனால்
கொடியவர் கொட்டம் அடக்கிட
ஐநா முற்றலிலே உன்
உடல் எரித்து உயிர் நீக்கி
உறங்கச் சென்றனையோ?

உயிருக்காய் உடலுக்காய்
உணவுக்காய் உறவுக்காய்
உயிர் காக்கவென
உழைத்திடுவோர் மத்தியிலே
உன் தாயைத் தந்தையை
ஓடிவிளையாடிய தங்கையை
தம்பியை நீ மறந்து
துடித்த எம் இனத்துக்காய்
தீயினில் குளித்ததை எம்
அகக் கண்ணால் கண்டு
நாமும் துடிக்கிறோம்

உன்னைப் போல் ஒருவனின்
உத்தமனின்  இழப்பு
உன்னவர்க்கு மட்டுமல்ல
எமக்கும் பேரிழப்பே
உனக்காக வாழாது
உன்னதக் கொள்கைக்காய்
உயிர்க்கொடை தந்தவனே
உலகில் தமிழன் உள்ளவரை
உனை நாம் மறவோம்




இது நான் முருகதாசன் நினைவுக்காக முன்பு எழுதிய கவிதை. உங்களுடன் பகிந்துள்ளேன்.


No comments:

Post a Comment